2026ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜன.14ம் தேதி முதல் 17ம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக் கரும்பு ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என ஏற்கெனகே தமிழ்நாடு அரசு அறிவித்தது. மேலும், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் மகிழ்ச்சியாக கொண்டாட ஏதுவாக, 3 ஆயிரம் ரூபாய் ரொக்கமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு முழுவதும் சுமார் 2 கோடியே 22 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. நேற்று (ஜன.12) வரை 24 ஆயிரத்து 924 ரேஷன் கடைகளில் உள்ள 2 கோடியே 4 லட்சத்து 10 ஆயிரத்து 899 அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகையாக ரூ.6,123.26 கோடி வினியோகம் செய்யப்பட்டது. பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் இன்றுடன் நிறைவு பெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு நாளையும் (புதன்கிழமை) வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







