மெரினா கடலில், பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு எதிராக மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
சென்னை மெரினா கடலில், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவாக 81 கோடி ரூபாய் செலவில் “பேனா” சின்னம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்திலும் பேனா நினைவுச்சின்னம் அமைக்க ஆதரவு மற்றும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திட்டத்தை தொடர தமிழக அரசு முனைப்பு காட்டியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த சூழலில் ” கடல் வளத்தை பாதுகாக்க வேண்டும். கடற்கரையோரங்களில் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்க வேண்டும், அந்த வகையில், சென்னை மெரினா கடலில் பேனா வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி மதுரையை சேர்ந்த சமூக ஆர்வலர் கே.கே.ரமேஷ் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மேலும் அந்த மனுவில், மெரினா கடலில் 134 அடி உயரத்துக்கு பின் சின்னம் அமைப்பது கடலோர ஒழுமுறை மண்டல விதிகள் அனைத்தையும் மீறிய நடவடிக்கை ஆகும். அதேபோல் காலநிலை மாற்றத்தால் அதிக மழைபொழிவு ஏற்படுவது வாடிக்கையாகியுள்ளது. இந்த காலகட்டத்தில் இவ்வாறான தேவையில்லாத, முக்கியத்துவமற்ற கட்டுமான திட்டங்களால் கடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழும். எனவே பேனா அமைக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.
மேலும், இந்தியா முழுவதுமாக 6632 கிலோமீட்டர் அளவுக்கு கடற்கரை உள்ளது. இதில் 33.6சதவிகிதம் அளவுக்கு கடல் அரிப்பால் பாதிப்படைந்துள்ளன. எனவே நாடு முழுவதும் கடற்கரை அருகே கட்டுமானத்துக்கு தடை விதிப்பதோடு, கடல் அரிப்பை தடுக்கும் விதமாக கடற்கரை ஓரங்களில் அதிக அளவிலான மரங்களை நடுவதற்கு தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட கடலோர மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார். இந்த மனு உச்சநீதிமன்றம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா