தென் தமிழகத்திலேயே முதல் முறையாக தனியார் மருத்துவமனைகளை போல், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் நோயாளிகள் கட்டண அடிப்படையில் சிகிச்சைப் பெறும் வகையில் பே-வார்டுகள் இன்று முதல் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிலும் தென் மாவட்டங்களில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில், மிக முக்கியமான மருத்துவமனையாக பார்க்கப்படுவது மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தான். இந்த மருத்துவமனையில் மதுரை மட்டுமில்லாமல் சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்ட சுற்றுவட்டார பகுதி மக்கள் சிகிச்சைக்காக வந்து பயன்பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் 20-க்கும் மேற்பட்ட துறைகள் உள்ளன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். அப்படிப்பட்ட இந்த மருத்துவமனையில் தனியார் மருத்துவமனைகளில் கூட செய்ய முடியாத பல்வேறு முக்கிய அறுவை சிகிக்களை வெற்றிகரமாக செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும் இதுதவிர ராஜாஜி அரசு மருத்துவமனை சூப்பர் ஸ்பெஷாலிட்டி வளாகத்தில் மூளை நரம்பியல், மூளை நரம்பியல் அறுவை சிகிச்சை, சிறுநீரகவியல், சிறுநீரகவியல் அறுவை சிகிச்சை, ரத்த நாளங்கள் துறை, மருந்தியல் துறை என 7 உயிர்காக்கும் அதிநவீன துறைகள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலமாக தலையார் மருத்துவமனைகளில் செய்ய முடியாத பல்வேறு அதிநவீன சிகிச்சைகள் சிறப்பாக அளிக்கப்படுகிறது. இதனால் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு தினமும் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.
சென்னை அரசு மருத்துவமனைகளுக்கு அடுத்தபடியாக பார்க்கப்படும் இந்த மதுரை ராஜாஜி அரசு மருத்துமனையில் தனியார் மருத்துவமனைகளுக்கு நிகரான சிகிச்சை வழங்கப்படவும், அதற்கு அனைத்து தரப்பு மக்களையும் வரவைக்கும் வகையில் கட்டண அடிப்படையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்து, அதிநவீன வசதிகளுடன் கூடிய பே-வார்டு என்றழைக்கப்படும் கட்டண வார்டு இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண வார்டை மக்கள் நல்வாழ்துறை அமைச்சர் மா .சுப்பிரமணியன் இன்று மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு நேரில் சென்று திறந்து வைத்தார்.
சுமார் 87 லட்சம் மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி பிளாக் கட்டிடத்தில் 8 பே-வார்டுகள், அண்ணா பேருந்து நிலையம் அருகே உள்ள விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு கட்டிடத்தில் 8 பே-வார்டுகள் என மொத்தம் 16 வார்டுகள் முதற்கட்டமாக திறக்கப்பட்டுள்ளது. இந்த வார்டுகளில் தனி கழிவறை, டி.வி., கட்டில்கள், மெத்தை போன்ற அனைத்து வசதிகளும் தனியார் மருத்துவமனைக்கு நிகராக உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கட்டண வார்டுகள் அனைத்திலும் குளிரூட்டப்பட்ட அதாவது ஏசி வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் ராஜாஜி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பே-வார்டுகளில் டீலக்ஸ் மற்றும் சிங்கிள் அறைகளுக்கு 2 ஆயிரம் முதல் 1,500 வரை கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், 2-ம் கட்டமாக, பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் குறிப்பாக மகப்பேறு பிரிவு துறையிலும் இந்த வசதிகளை விரிவாக்கம் செய்ய முடிவு செய்து மேலும் 8 பே-வார்டுகள் அமைக்கப்பட உள்ளது .
இந்த நிகழ்சியில் மதுரை மாவட்ட ஆட்சியர், ராஜாஜி மருத்துவமனை முதல்வர் ஆகியோர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் ம.சுப்பிரமணியன், எய்ம்ஸ் மருத்துவமனை குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது பேசிய அவர், எய்ம்ஸ் மருத்துவமனை விவகாரத்தில் மத்திய அரசு தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளாததால் தொடர்ச்சியாக பணிகளில் தொய்வு ஏற்ப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான கட்டுமான பணிகள் டிசம்பர் மாதத்தில் தான் தொடங்கும்.
தமிழ்நாடு சார்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசிக்கு முதலமைச்சர் எப்போதெல்லாம் கடிதம் அனுப்புகிறாரோ, அப்போதெல்லாம் மதுரையைப் பற்றி குறிப்பிட்டுக் கொண்டே இருக்கிறார். எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 2028- ஆம் ஆண்டு நிறைவடையும் என்ற அளவில் தான் போய்க்கொண்டிருக்கிறது என்று தெரிவித்தார்.
பி.ஜேம்ஸ் லிசா