கர்நாடக சட்டமன்ற தேர்தலில் அதிமுக போட்டியிடும் என அறிவித்துள்ளது தொடர்பாக, கட்சி மேலிடம் முடிவெடுக்கும் என பாஜகவின் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
கர்நாடக சட்டமன்ற தேர்தல் வேட்புமனு தாக்கல் வரும் 13ம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கர்நாடக மாநிலத்திற்கான தேர்தல் ஒரே கட்டமாக மே 10ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. 224 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 50 தொகுதிகளில் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்களாக தமிழர்கள் உள்ளனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதனால், கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடலாமா? வேண்டாமா? என்பது குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் அதிமுகவின் கர்நாடகா மாநில செயலாளர் எஸ்.டி. குமார் தலைமையில் பெங்களூரில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சுமார் 300 நிர்வாகிகளிடம் கருத்துக்கேட்கப்பட்ட நிலையில், பெரும்பாலான நிர்வாகிகள் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தெர்வித்தனர். மேலும் தேர்தலில் போட்டியிட்டால் 10 தொகுதிகளிலாவது அதிமுக வேட்பாளர்கள் நிறுத்தப்பட வேண்டும் என விருப்பம் தெரிவித்திருந்தனர். கர்நாடகா நிர்வாகிகளிடம் பெறப்பட்ட கருத்துக்கள் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் புலிகேசி நகர் தொகுதியில் கர்நாடக மாநில அவைத்தலைவர் அன்பரசன் போட்டி என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணியில் உள்ள நிலையில், அதுதொடர்பாக கருத்துகள் எதுவும் தெரிவிக்கப்படாத நிலையிலும், வேட்பாளர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் சில தொகுதிகளில் போட்டியிடும் வகையில், வேட்பாளர்கள் அறிவிப்பை வெளியிடவும் திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் அறிவிப்பு குறித்து கருத்து தெரிவித்த பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், இது சம்மந்தமாக பாஜக மேலிடம் மட்டுமே முடிவெடுக்கும் என கூறியுள்ளார்.
- பி.ஜேம்ஸ் லிசா