“தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் வீரப்பெரும்புகழ் போற்றுவோம்” – சீமான்!

தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளில் வீரப்பாட்டனின் பெரும்புகழ்போற்றுவோம் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், “வான்புகழ் கொண்ட தமிழ்ப்பெரும்பாட்டன் அரசர்க்கரசர் அருண்மொழிச்சோழன், ஆடி திருவாதிரை நாளில் பெற்றெடுத்த புவி ஆண்ட புலி மைந்தன் நம்முடைய பெரும்பாட்டன் பேரரசர் அரசேந்திரச் சோழன் பிறந்த ஆடி திருவாதிரை திருநாள் இன்று!

கடற்போரில் சிறந்து விளங்கிய கடற்புலி! வடநாடு வரை படையெடுத்து வங்காளத்தை ஆண்ட மகிபாலனை வென்று கங்கை கொண்டச் சோழன்!

இன்றைய இந்தியப் பெருநிலத்தில் சட்டீஸ்கர், ஒரிசா வரை இருந்த எண்ணற்ற தேசங்கள், மலேயா, சிங்கப்பூர் சுமத்ரா தீவுகள், கம்போடியா, இந்தோனேசியா என தென் கிழக்கு ஆசியா முழுவதும் சோழப் பேரரசை விரியச் செய்து, தெற்காசியப் பெருங்கண்டத்திலேயே அதிகப் பரப்பளவு கொண்ட நிலப்பரப்பினை வென்றெடுத்து ஆளுகை செய்த செந்தமிழ்ச்செல்வன்!

நீர் மேலாண்மையை வெற்றிகரமாகக் கையாண்டு வேளாண்மையை செழிக்கச்செய்து பஞ்சம் தீர்த்து மக்கள் வறுமை போக்கிய அருந்தமிழ் அரசன்!

வறண்ட நிலப்பகுதியாக காட்சி தரும் அரியலூர் மாவட்டத்தில் கங்கை கொண்ட சோழபுரம் என்னும் மாபெரும் தலைநகரை உருவாக்கி அதற்கென ஏறக்குறைய இருபது மைல் நீளமுடைய, பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை உள்ளடக்கிய ஏரியினைக் கட்டி பல்லுயிர் சூழல் காத்த உயிர்மநேயர் மாமன்னர் அரசேந்திரச் சோழன்!

இன்றளவும் நம் கண்கள் முழுக்க ஆச்சரிய கனவாக விரிந்து வானை முட்டி உயர்ந்து நின்று, தமிழர்களின் படைப்பாற்றலை உலகிற்குப் பறை சாற்றி ஆயிரமாயிரம் பிறை கண்ட கருங்கல் அதிசயத்தை, தமிழர் மெய்யியல் தேடலை விளக்கும் கலைப்பெட்டகமான பெருவுடையார் கோயிலை மிகச்சரியாக 1000 ஆண்டுகளுக்கு முன் கி.பி1025 ஆம் ஆண்டு கங்கைகொண்ட சோழபுரத்தில் எழுப்பி காலத்தை வென்று நின்ற பெருமாவீரன்!

அலைகடல் மீது படைபல நடத்தி, கங்கையும், கலிங்கமும், கடாரமும், இலங்கையும் வென்று, பாயும் புலிக்கொடி பட்டொளி வீசி பறந்திட, தென் கிழக்காசியா முழுமையும் சோழப்பேரரசின் வெண்கொற்றக்குடையின் கீழ் கொண்டுவந்து, உலகின் நான்காவது பெரும் பேரரசை நிறுவிய தமிழ்ப்பெரும்பாட்டன் மாமன்னன் அரசேந்திரச்சோழனின் பிறந்தநாளில், போற்றி வணங்குவதில் பெருமிதமடைகிறோம்!

தமிழர்களின் வீரத்தையும், தீரத்தையும், அறத்தையும், அறிவையும், ஆற்றலையும் பார்போற்றப் பறைசாற்றி, தமிழினத்தைப் புகழின் உச்சியில் ஏற்றிய தமிழ்ப்பேரரசன் அரசேந்திரச்சோழன் பிறந்த ஆடி திருவாதிரை நாளில் வீரப்பாட்டனின் பெரும்புகழ்போற்றுவோம்”! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.