இரவின் நிழல் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பார்த்திபன் மேடையில் இருந்து மைக்கை தூக்கியெறிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்த்திபன் இயக்கத்தில் உருவான இரவின் நிழல் திரைப்படத்தில், பார்த்திபன், வரலஷ்மி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படம் 96 நிமிடங்கள் கொண்டு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சேத்துப்பட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விழாவில், இயக்குநர்கள் சமுத்திரகனி, கரு பழனியப்பன், பாடலாசிரியர் மதன் கார்க்கி, பாடகி ஷோபனா சந்திரசேர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில், ஏ.ஆர்.ரஹ்மான் கலந்துகொண்டு படத்தின் முதல் பாடலை வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சியின்போது இயக்குநர் பார்த்திபன் பேசுகையில், மைக் சரியாக வேலை செய்யவில்லை என மைக்கை வேகமாக முன்வரிசையில் தூக்கி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தொர்ந்து, பார்த்திபன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டார். மைக் வேலை செய்யாததால் கோபம் அடைந்துவிட்டேன். இது நிச்சயமாக அநாகரியமான செயல். என்னை மன்னிக்கவும் என்று பேசினார்.
தொடர்ந்து, ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, இரவின் நிழல் திரைப்படம் அமெரிக்கா, ஐரோப்பாவில் வெளியாகி இருந்தால் உலகமே கொண்டாடி இருக்கும். தமிழ் திரைக் கலைஞர்களிடம் பல திறமைகள் உள்ளன. நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் என்றார்.
இந்நிகழ்ச்சியில் கரன் கார்க்கி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இயக்குனர் சசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.









