சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சை; டீன் ரத்தினவேலுக்கு ப.சிதம்பரம் ஆதரவு

ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக் கூடாது என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார். மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆங்கில மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக்…

ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக் கூடாது என ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியில் ஆங்கில மொழிபெயர்ப்பில் சமஸ்கிருத உறுதிமொழியான ‘மகரிஷி சரக் ஷபத்’ உறுதிமொழி ஏற்கப்பட்டதால் சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து, மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் ரத்தினவேல் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

தன்னிச்சையாக விதிமுறைகளை மீறி சமஸ்கிருத உறுதிமொழியை ஏற்க வைத்ததாக டீன் மீது துறை ரீதியாக விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது, வருத்தம் அளித்தது என்று தெரிவித்தார்.

டீன் டாக்டர் ரத்தனவேலு அவர்கள் கொரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவ மனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம் என்றும் கூறினார். மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள் என்று குறிப்பிட்ட அவர், “அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த டாக்டரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை” என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.