நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது. இந்தக் கூட்டத் தொடர் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடர் 2 கட்டங்களாக நடத்த முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டத்தொடரையொட்டி 28ம் தேதி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் தாக்கலைத் தொடர்ந்து 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்படுகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன், மரபுப்படி நடைபெறும் அனைத்துக் கட்சி கூட்டம் இன்று நடைபெற உள்ளது.
நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் உள்ள முதன்மை குழு அறையில், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவாதத்திற்கு வரவிருக்கும் முக்கிய பிரச்சனைகள், சட்ட மசோதாக்கள் குறித்தும், அவையை சுமூகமாக நடத்துவது குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட உள்ளது.







