திருவள்ளூர் அருகே அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கில் தொழில் போட்டி காரணமாக கொலை செய்ததாக குற்றவாளிகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே உள்ள கொண்டகரை கிராமத்தில் குருவிமேடு என்ற இடத்தில் பிறந்தநாள் விழாவிற்கு சென்று விட்டு மனைவி சர்மிளா மற்றும் குழந்தைகளுடன் காரில் வீடு திரும்பிய அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் மனோகரனை டிப்பர் லாரியில் வந்த 10க்கும் மேற்பட்ட கும்பல் பட்டா கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சரமாரியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வெட்டி படுகொலை செய்ததது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் அவரது உடலை கைப்பற்றிய மீஞ்சூர் போலீசார் உடற்கூய்வு ஆய்வுக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் ஆய்வு செய்த போலீசார் சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்ட போது 10-க்கும் மேற்பட்ட கும்பல் கொலை சம்பவத்தை அரங்கேற்றியது தெரியவந்தது.
இதனையடுத்து ஆவடி ஆணையாளர் சந்திப் ராய் ரத்தோர் தலைமையில் செங்குன்றம் காவல் உதவி ஆணையர் முருகேசன், எண்ணூர் காவல் உதவி ஆணையர் பிரம்மாண்டம் ஆகியோர் கொண்ட இரண்டு தனிப்படைகள் அமைத்து கொலையாளிகளை தேடி வந்தது.
இந்நிலையில் இக்கொலையில் ஈடுபட்டதாக வெள்ளி வாயில் சாவடியை சேர்ந்த சுந்தர் என்ற சுந்தரபாண்டியன், லாரியின் ஓட்டுநர் பத்மநாபன் அவரது உறவினர் அரவிந்த் குமார் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது தொழில் ரீதியாக ஏற்பட்ட முன்விரோதத்தில் குற்றவாளிகள் நாகராஜ் என்ற பாம்பு நாகராஜ், ராஜ்குமார் என்ற பாட்டில் ராஜ், யுவராஜ் என்ற கில்லி யுவராஜ், ராஜேஷ் என்ற ஆகாஷ், பாலா என்ற யுவராஜ், மது கோபாலகிருஷ்ணன், சூர்யா ஆகிய ஏழு பேரையும் சுந்தரபாண்டியன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கைது செய்தனர்.
மேலும், அவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய லாரி, 7 கத்தி, செல்போன்கள் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து செங்குன்றம் எண்ணூர் காவல் நிலையங்களில் வைத்து தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.