திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நாளை பஞ்சரத தேரோட்டம் நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் வெவ்வேறு வாகனத்தில் சிவபெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக எளியமுறையில் தீபத்திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் இல்லாததால் சிறப்பான முறையில் தீபத்திருவிழாவை கொண்டாடுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், கோயில் நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது.
தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மகா தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. காலை முதல் இரவு வரை பஞ்ச ரதங்களின் தேரோட்டம் அடுத்தடுத்த மாடவீதியில் உலா வரும் காட்சி சிறப்பானது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரள்வர். எனவே பாதுகாப்பு பணிகளுக்காக 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
நாளை காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. முதலாவதாக ஸ்ரீவிநாயகர் தேரும், வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீமுருகபெரும் தேர் இரண்டாவதாகவும் புறப்படும். 3வதாக பெரிய தேர் எனப்படும் அருணாசலேஸ்வரர் தேர் புறப்படும். 4வதாக பெண்கள் மட்டுமே இழுக்கும் பராசக்தியம்மன் தேரும், 5வதாக சிறுவர்கள் மட்டுமே இழுக்கும் சண்டிகேஸ்வரர் தேரும் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்படும்.
மாடவீதிகளில் வலம் வரும் தேரோட்டத்தை காண பல லட்சம் பக்தர்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக வழக்கத்தை விட அதிக அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.