தென்காசி மாவட்டம், பாஞ்சாகுளம் கிராமத்தில் மாணவர்களிடம் தீண்டாமை நிகழ்த்திய விவகாரத்தில் 5 பேருக்கு 6 மாதங்கள் ஊருக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் மகேஸ்வரன், ராமச்சந்திரன், குமார், சுதா, முருகன் ஆகிய ஐந்து பேரும் 20.09.22 தேதி முதல் சம்பந்தப்பட்ட பாஞ்சாகுளம் ஊருக்குள் ஆறு மாத காலத்திற்கு நுழைய தடை விதித்து நெல்லை மாவட்ட தீண்டாமை வன்கொடுமைக்கு எதிரான தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மநாபன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகேயுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் பட்டியலினத்தை சேர்ந்த பள்ளி மாணவர்கள் திண்பண்டங்கள் வாங்குவதற்கு கடைக்குச் சென்றுள்ளனர். ஆனால் கடைக்காரர் ஊரில் கட்டுப்பாடு போடப்பட்டுள்ளதால் திண்பண்டங்கள் வழங்க முடியாது எனக் கூறியுள்ளார்.
இச்சம்பவம் பெறும் அதிர்வலைகளை ஏற்படுத்தியடுத்து, இந்த விவகாரத்தில் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பாஞ்சாகுளத்தில் புதிய கிராம நிர்வாக அலுவலர் நியமனம் செய்யப்பட்டதோடு, இந்த விவகாரத்தில் அடுத்தடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.







