உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது.
இயேசு கிறிஸ்து இயேசு கழுதை மேல் அமர்ந்து ஒலிவ மலையில் இருந்து கித்திரோன் பள்ளத்தாக்கின் வழியாக வந்து “தாவீதின் குமாரனுக்கு ஓசன்னா” என்று முழங்கியபடி எருசலேம் நகருக்குள் வெற்றி ஆர்ப்பரிப்புடன் நுழைந்ததை கிறிஸ்தவர்களால் ஆண்டுதோறும் நினைவுபடுத்தும் ஒரு நிகழ்வுதான் குருத்து ஞாயிறு ஆகும். இந்த நிகழ்வை ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்தவர்கள் குருத்து ஞாயிறாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தவக்காலத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஈஸ்டர் திருநாளுக்கு முன்பு கிறிஸ்தவர்கள் 40 நாட்கள் உபவாசம் இருந்து கடைப்பிடிக்கும் தவக்காலம் பிப்ரவரி மாதம் 22-ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 2-ஆம் தேதியான இன்று தமிழகத்தில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி, சென்னை மயிலாப்பூர் சாந்தோம் பேராலயம், பெசன்ட் நகர் ஆரோக்கிய மாதா தேவாலயம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, கன்னியாகுமரி, புதுச்சேரி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் உள்ள கிறிஸ்தவ தேவையாளங்களிலும் குருத்தோலை பவனி நடைபெற்றது.
அந்த வகையில், நாகை மாவட்டம் உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான மக்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா என்று பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.
இதேபோல் சென்னை சாந்தோம் பேராலயத்திலும், பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி பேராலயத்திலும் குருத்தோலை ஞாயிறு இன்று கொண்டாடப்பட்டது. திருப்பலிக்கு முன்பாக பேராலயத்தை சுற்றி நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளான மக்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஓசன்னா என்று பாடியவாறு பவனியாக வந்தனர். இதனை தொடர்ந்து பேராலய பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியிழும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் வழிபாடு செய்தனர்.
கரூர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் இருந்து பொதுமக்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி ஜவகர் பஜார் மற்றும் நகரின் முக்கியப் பகுதிகளின் வழியாக ஓசன்னா கீதங்களை பாடியபடி, பவனியாக வந்தனர். பின்னர் சிஎஸ்ஐ தேவாலயத்தில் சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள திரு இருதய ஆலயத்தில், குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. மதுரை மாவட்ட அதிபர் சந்தன சகாயம் தலைமையில் சிஎஸ்ஐ பங்குத்தந்தை பால் தினகரன் மற்றும் ஆர்சி உதவி பங்குத்தந்தை ஜேம்ஸ் ஆகியோர் வழி நடத்துதலில் திரு இருதய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வைத்து குருத்தோலையை புனிதநீர் தெளித்து ஜெபம் செய்தனர். பின்பு கிறிஸ்தவர்கள் தென்னை ஓலையான குருத்தோலையை கையிலேந்தி பள்ளியின் முன்பிலிருந்து ஓசானா என்னும் பாடலை பாடலை பாடியபடி காமராஜர் சாலை பேருந்து நிறுத்த மணிக்கூண்டு வழியாக வலம் வந்து திரு இருதய ஆலயத்திற்கு வந்தடைந்தனர். அதன்பின்பு நடைபெற்ற திருப்பலியில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில் அமைந்துள்ள பரி லூக்கா ஆலயத்தில் இன்று குருத்தோலை பவனி சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்காக ஆலயத்தில் காலை நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில், சிறுவர், சிறுமிகள், ஆண்கள், பெண்கள் உட்பட கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு, ஓசன்னா பாடலை பாடியபடி கையில் குருத்தோலை ஏந்தி ஏரல் பஜார் வீதிகள் வழியாக பவனி சென்றனர். அதன் பின்னர் மீண்டும் ஆலயத்தை வந்தடைந்து திருப்பலியில் பங்குபெற்று வழிபாடு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தென்தாமரைகுளம் சிஎஸ்ஐ சேகர கஸ்பா ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. அப்போது அந்த ஆலயத்தை சேர்ந்தவர் 200க்கும் மேற்பட்டோர் வெள்ளை ஆடைகளை அணிந்தபடி குருத்தோலைகளை கையில் ஏந்தி ஓசன்னா பாடல்களை பாடி அந்த பகுதியின் ஊர்களை பவனியாக சுற்றி வந்தனர். இதனை தொடர்ந்து நடைபெற்ற திருப்பலியில் பங்குபெற்று வழிபாடு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சி அருகில் இருந்து தூய வியகுலா அன்னை ஆலயத்திற்கு அருட்பணி பங்குத்தந்தை (பொறுப்பு ) அந்தோணிராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலை கையில் ஏந்தி ஓசான்னா பாடல் பாடியவாறு ஊர்வலமாக சென்று தூய வியாகுல அன்னை ஆலயத்தில் வந்தடைந்தனர். அதேபோல் வந்தவாசி நகரில் தூய இருதய ஆண்டவர் தேவாலயம் சார்பில் ஏராளமான கிருத்துவர்கள் கையில் குருத்தோலை ஏந்தி கிருத்துவ பாடல் பாடி ஊர்வலமாக சென்றனர்.
திருநெல்வேலி பாளையங்கோட்டையில் உள்ள மிகப்பழமையான குளோரிந்தா தேவாலயத்தில் நெல்லை மறை மாவட்ட பேராயர் பர்னபாஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடத்தப்பட்டது. அதற்கு முன்பாக நடைபெற்ற குருத்தோலை பவனியில் திரளாக கலந்து கொண்ட கிறிஸ்துவர்கள் கையில் குருத்தோலைகளை ஏந்தி வீதிகளில் பவனி வந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, புனித சூசையப்பர் திருத்தலம் மற்றும் சிஎஸ்ஐ புனித பவுலின் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு முன்னிட்டு குரு தோலை பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்தப் பவனியில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் கையில் குருத்தோலைகளுடன் ஓசானா பாடல் பாடியவாறு சுமார் 1000 க்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர். இதில் கோவில்பட்டி புனித சூசையப்பர் திருத்தல பங்குத்தந்தை அலாசஸ் துரைராஜ், உதவி பங்கு தந்த மகேஷ் மற்றும் சிஎஸ்ஐ
ஆலய போதகர்கள் கலந்து கொண்டனர்.
கிருஷ்ணகிரி பழையபேட்டையில் உள்ள புனித இன்னாசியார் ஆலயத்தில் இருந்து பெங்களூரு சாலையில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயத்திற்கு கிறிஸ்தவர்கள் குருத்தோலையை ஊர்வலமாக கொண்டு சென்றனர். இந்த குருத்தோலை பவனியில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் கைகளில் குருத்தோலைகளை ஏந்தியவாறு, உன்னதங்களின் ஒசாண்ணா என்ற பாடலை பாடியவாறு சென்றனர். பின்னர் தருமபுரி மறைமாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் தமைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
- பி.ஜேம்ஸ் லிசா