பாகிஸ்தான் அமைச்சர் எக்ஸ் தள கணக்கு முடக்கம் – மத்திய அரசு நடவடிக்கை!

பாகிஸ்தான் அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் தள கணக்கை இந்தியாவில் மத்திய அரசு முடக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு உலக தலைவர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதன் காரணமாக பாகிஸ்தான் மீது சிந்து நதி ஒப்பந்தம் ரத்து, விசா நிறுத்தி வைப்பு, பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. பதிலுக்கு இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் பாகிஸ்தான் நாட்டு வான் பரப்பில் பறக்க தடை, வர்த்தக நிறுத்தம், இந்தியர்கள் வெளியேற்றம், சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகளை பாகிஸ்தான் மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

மேலும் பாகிஸ்தானை சேர்ந்த பலரின் எக்ஸ் தள பக்கங்கள், யூடியூப் சேனல்கள் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தானின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அதாவுல்லா தாரரின் எக்ஸ் வலை தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.

இவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் மீது அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் இந்தியா ஒரு ராணுவ நடவடிக்கையைத் திட்டமிடுகிறது என்பதற்கான நம்பகமான தகவல் தன்னிடம் இருப்பதாக கூறியதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.