நெல்மணிகள் வீணாகுவதை தடுக்க அந்தந்த மாவட்டங்களில் நெல் சேமிப்பு கிடங்குகளை அதிகப்படுத்த வேண்டும் என ஜி.கே.வாசன் எம்.பி. கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கடும் உழைப்பால் விளைவித்த நெல்மணிகள் போதிய பாதுகாப்பு இல்லாமல், சேமிப்பு கிடங்கு இல்லாமல் மழையில் நனைந்து வீணாவது மிகவும் வருந்ததக்கது என வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் பெய்த மழையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள வெடால் கிராமத்தில் உள்ள நேரடி அரசு கொள்முதல் நிலையத்திற்கு, கடுக்கலூர், கடப்பாக்கம், தென்னேரிப்பட்டு, ஒத்திவிளாக்கம், வயலூர் மற்றும் பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் அவர்கள் விளைவித்த நெல்லை கொண்டுவந்து விற்பனைக்காக காத்திருக்கும் போது பெய்த மழையால் நனைந்தும், ஏற்கனவே கொள்முதல் செய்து அடிக்கி வைத்திருந்த ஆயிரக்கணக்கான மூட்டைகளில் நெல் முளைத்து பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது.
விவசாயிகள் மழை, காற்று, வெள்ளம், பொருளாதார பற்றாக்குறை, உரத்தட்டுப்பாடு என்று பல்வேறு பாதிப்புக்கு இடையில் நடவுசெய்து, நெல்லை விளைவித்து அவற்றை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். அப்படி வந்த பிறகு அவற்றை கொள்முதல் செய்வதில் காலதாமதம், கொள்முதல் செய்த நெல்லை சேமிப்பு கிடங்கிற்கு மாற்றாமல் மழையில் நனையவிடுவது என்று அரசு மற்றும் அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மிகவும் பாதிக்கப்படுவது விவசாயிகளும், பொது மக்களும் தான்.
கொள்முதல் செய்த நெல்லை பல இடங்களில் சிமெண்ட் தரைதளம் வசதியும், குடோண் வசதியும் இல்லாமல் வெட்டவெளியில் மூட்டைகளாக அடிக்கி வைத்தும், மண் தரையில் குவியலாக குவித்து வைத்தும் இருக்கின்றனர். இவை மழை பெய்யும் போது நனைந்து வீணாவது ஆண்டாண்டு காலமாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்கதையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இந்த நிலை மாற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
தேவைக்கேற்ப அந்தந்த பகுதிகளில் கொள்முதல் நிலையங்களையும், சேமிப்பு கிடங்குகளையும் அதிகப்படுத்த வேண்டும். கடந்த ஆண்டு உலக பட்டினி ஆய்வறிக்கையில் உலகில் உள்ள 116 நாடுகளில் இந்தியா 101 வது இடத்தில் உள்ளது. இரவு சாப்பாடு இல்லாமல் வறுமையில் பல்லாயிரம் பேர் உறங்குகின்றனர் என்று ஆய்வறிக்கை கூறுகிறது. நிலைமை இவ்வாறு இருக்க நாம் உற்பத்தி செய்த நெல் மணிகளை இப்படி வீணாக்கலாமா ? இந்த வருடம் பயிர் காப்பீடு செய்வதற்கு எந்த ஏற்பாடும் அரசு செய்யவில்லை என்று விவசாயிகளின் தவிக்கின்றனர்.
தற்பொழுது இடையிடையே பருவம் தவறிய மழையும், இயற்கை சீற்றங்களும் ஏற்பட்டால் ஏற்கனவே பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும் விவசாயிகளால் தாங்க முடியாது. ஆகவே மத்திய மாநில அரசுகள் பயிர் காப்பீடு செய்வதற்கு உரிய நேரத்தில் ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இயற்கையால் ஏற்படும் இடர்பாடுகளில் இருந்து விவசாயிகள் காக்கப்பட வேண்டும் என ஜி.கே.வாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- இரா.நம்பிராஜன்








