நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்கக்கோரி நெல்லை ஆட்சியர் அலுவலகம் மற்றும் தாமிரபரணி ஆற்றில் தாங்கள் அறுவடை செய்த நெற்பயிரைக் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பிசான சாகுபடி அறுவடை பணிகள் துவங்கியுள்ளன. குறிப்பாகத் தாமிரபரணி, மணிமுத்தாறு, ஆற்றுக்கால் பாசன விவசாயிகள் நெல் அறுவடை பணிகளைத் துவங்கவுள்ள நிலையில் இதுவரை போதுமான அளவிற்கு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் பல்வேறு இடங்களிலும் நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதனடிப்படையில் திருநெல்வேலி மாநகராட்சியை ஒட்டியுள்ள பொட்டல், திருவண்ணநாதபுரம், படப்பைக்குறிச்சி, கோட்டூர், பெரியபாளையம், திம்மராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் நெல் கொள்முதல் நிலையத்தைத் திறக்க வேண்டும் என்று வேளாண்துறை அதிகாரிகளிடம் முறையீடு செய்தனர். ஆனால் ஆள் பற்றாக்குறை, இயந்திர பற்றாக்குறை எனக் காரணங்கள் கூறப்பட்டு இதுவரை நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு கொட்டியும் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றின் மூலம் விளைவித்த நெல்லை அதே ஆற்றில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் நெல் கொள்முதல் நிலையம் இதுவரை அமைக்கப் படாததால் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய அவல நிலையில் உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.