“1.4 கோடி முதியவர்களில் இதுவரை 47 லட்சம் பேர் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” – ராதாகிருஷ்ணன்

தமிழ்நாட்டில் 1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,152 பேருக்கு…

தமிழ்நாட்டில் 1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மாநிலம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,152 பேருக்கு கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 1,152 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,92,949 ஆக உயர்ந்துள்ளது.

தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர்களில் 19 பேர் இன்று உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 35,987 ஆக அதிகரித்துள்ளது. தொற்றிலிருந்து ஒரே நாளில் 1,392 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,43,431 ஆக உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் தற்போது 13,531 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் மாநிலம் முழுவதும் 6ம் கட்ட மொக தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன், “கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அபாயம் உள்ளது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் இந்த முகாமை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு வல்லுநர் குழு அதிகார பூர்வமாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.” என்று கூறினார்.

 

மேலும், “1.4 கோடி முதியவர்களில் 47 லட்சம் நபர்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். முதியவர்கள் தடுப்பூசி போட்டுவதை குடும்பத்தினர் ஊக்குவிக்க வேண்டும். இதுவரை 68% பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ள நிலையில் இன்று இந்த எண்ணிக்கை 70% மேல் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், “மழை காலத்தில் வரும் அனைத்து நோய்களையும் கண்காணிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். 21 ஆயிரம் பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பாதிப்பு காரணமாக இரண்டு தவணை தடுப்பூசி போட்டவர்கள் 4% பேரும் முதல் தவணை தடுப்பூசி போட்டவர்கள் 9% பேர் இறந்துள்ளனர். இந்த இறப்புகளும் பல்வேறு காரணங்களால் ஏற்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார்.

 

இன்று 50,000 தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தடுப்பூசியே இதுவரை எடுத்துக்கொள்ளாதவர்களை கண்டறிந்து அவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுவதில் முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும், அதேபோல போதுமான அளவு தடுப்பூசி கையிருப்பில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.