“இறுதிப் போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு”- ஆஸ்திரேலிய அணி கேப்டன் பாட் கம்மின்ஸ்

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு” என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை…

“இந்தியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில் ரசிகர் கூட்டத்தை அமைதியாக்குவதே எங்களது இலக்கு” என ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி தொடங்கிய உலகக் கோப்பைத் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.  அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.  10 ஆண்டுகளாகத் தொடரும் ஐசிசி கோப்பைக்கானத் தேடலை பூர்த்தி செய்யும் நோக்கத்தோடு இந்திய அணியும்,  6-வது முறையாக உலகக் கோப்பையை வசமாக்கும் முனைப்போடு ஆஸ்திரேலிய அணியும் களம் காண்கின்றன.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் பேசியதாவது:

நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கான ஆதரவாளர்கள் மட்டுமே அதிக அளவில் இருப்பார்கள் என எனக்குத் தெரியும்.  மைதானத்தில் இருக்கும் 1,30,000 பார்வையாளர்களும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்று அவர்களை உற்சாகப்படுத்துவார்கள்.

நாளைய இறுதிப்போட்டியில் ரசிகர்களை அமைதியாக்குவதே எங்கள் இலக்கு.  இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய அணியை ஒருநாள் தொடரில் நாங்கள் வீழ்த்தியுள்ளோம்.  இந்திய அணிக்கு எதிராக அதிகப் போட்டிகளில் விளையாடியுள்ளது எங்களுக்கு உதவியாக இருக்கும்.  பலம் வாய்ந்த இந்திய அணியை எதிர்கொள்வது சவாலானது என்றார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.