ஓபிஎஸ்-ன் யுக்திகள் தோல்வியில் முடியும் – முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஓபிஎஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வட கிழக்கு…

ஓபிஎஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும் என மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை
சந்தித்தார். அப்போது பேசிய அவர், “வட கிழக்கு பருவ மழை நாளை முதல் தொடங்க உள்ளது. அரசின் மெத்தன போக்கினால் மழை நீர் வடிகாலில் செய்தியாளர் விழுந்து இறந்துள்ளார்.வட கிழக்கு பருவ மழை முன்னேற்பாடுகள் தமிழக அரசு முறையாக செய்ய வேண்டும். பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு செய்ய வேண்டும்.

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகத்தில் தீவிரவாதம் தலை தூக்குகிறது. கோவையில் 1998ல் 11 இடங்களில் குண்டு வெடிப்பு நடந்ததில் இருந்தே மக்கள் மீளவில்லை. அதிமுக ஆட்சி காலங்களில் பயங்கரவாதம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. சோற்றில் பூசனிக்காயை மறைப்பது போல அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் ஒன்றும் நடக்கவில்லை என பேசி வருகிறார்.

கோவை சம்பவம் குறித்து முதல்வர் மவுனம் கலைத்து பேச வேண்டும். தீவிரவாதம், பயங்கரவாதத்துக்கு எதிராக திமுக தலைமையிலான அரசு வேடிக்கை பார்த்தால், ஆட்சியில் இருந்து அவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். திமுக இந்தி திணிப்புக்கு எதிராக நடத்தும் போராட்டம் மடை மாற்றும் செயல். தமிழுக்கு ஆபத்து என திமுக பேசி வருகிறது. தமிழை அதிமுக மட்டுமே பாதுகாத்து வருகிறது. தமிழுக்கு ஒரு பிரச்னை என்றால் அதிமுக முதலில் நிற்கும். அதிமுக ஆட்சியில் திமுக அர்த்தமில்லாமல் 40,000 போராட்டங்கள் நடத்தியது.

எடப்பாடி பழனிசாமி தென் தமிழகத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைகளுக்கு மரியாதை செய்துள்ளார். 2017ல் தேவரின் தங்க கவசம் எடுப்பதற்கு எடப்பாடி பழனிசாமி மதி நுட்பத்தோடு செயல்பட்டார். தேவரின் தங்க கவச விவகாரத்தில் எங்கள் தரப்பிற்கு எதிராக பல சூழ்ச்சிகள் செய்யப்பட்டது. எதிர் வரும் காலங்களில் பசும்பொன்னுக்கு எடப்பாடி பழனிசாமி வருவார். சலசலப்பு, சச்சரவுக்கு எதிராக எடப்பாடியார் அஞ்ச மாட்டார்.

ஓபிஎஸ்ஸின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது மக்களுக்கு தெரியும். தேனி மாவட்டத்தில் 1 தொகுதியில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இதுவே ஓபிஎஸ்ஸின் செல்வாக்கு. ஓபிஎஸ் எந்தவொரு தேர்தல்களிலும் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படவில்லை. ஓபிஎஸ் தன்னை முன்னிலைப்படுத்தும் யுக்திகள் தோல்வியில் முடியும். 50 ஆண்டுகளில் அதிமுக தோல்வியையும், வெற்றியையும் சந்தித்துள்ளது. அதிமுகவில் எதுவும் நிரந்தரமில்லை. வீழ்வதும், வெல்வதும் தொண்டர்கள், மக்கள் கையில் உள்ளது. எடப்பாடி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக புதிய வரலாறு படைக்கும்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.