ஓபிஎஸ் ஆதரவாளரும், முன்னாள் அமைச்சரும, அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான வைத்திலிங்கம், சசிகலாவை திடீரென சந்தித்தார். அப்போது, அவரிடம் பிறந்த நாள் வாழ்த்து பெற்றார் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம்.
வைத்திலிங்கத்திற்கு இனிப்பு வழங்கி தனது வாழ்த்துகளை தெரிவித்தார் சசிகலா.
அதிமுகவில் எழுந்த ஒற்றைத் தலைமை கோரிக்கையை அடுத்து, ஓபிஎஸ்-இபிஎஸ் என இரு அணிகள் பிரிந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக வைத்திலிங்கம், புகழேந்தி உள்ளிட்ட கட்சியின் முக்கியத் தலைவர்கள் ஆதரவாக இருக்கின்றனர். இபிஎஸ்-க்கு முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் ஆதரவாக உள்ளனர்.
இந்நிலையில் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் தோல்விகளுக்கு பிறகு கட்சியை மீண்டும் பலப்படுத்த வேண்டும் என்ற பேச்சுக்கள் எழுந்த நிலையில் ஒற்றைத் தலைமை என்ற கோஷம் தலை தூக்கியது.
கட்சியை தனது தலைமையில் வலுப்படுத்த வேண்டும் என அதற்கான வேலைகளை தொடங்கினார் எடப்பாடி பழனிசாமி. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் இரட்டைத் தலைமை தொடர வேண்டும் என தெரிவித்தார். கட்சியில் பொதுக் குழு நடைபெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
எனினும், பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக பொதுக் குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டார். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது ஓபிஎஸ் தரப்பு.
ஓபிஎஸ்-க்கு ஆதரவாக முதலில் தீர்ப்பு வந்தது. பின்னர், அந்த உத்தரவை எதிர்த்து மீண்டும் உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், பொதுக் குழுவில் இபிஎஸ் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உத்தரவிட்டது.
இதனிடையே, பிளவுபட்டுள்ள அதிமுகவை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபடுவேன் என்று சசிகலா சூளுரைத்தார். ஆனால், இபிஎஸ் தரப்பு சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க மறுப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் சசிகலாவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.