ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், வேட்புமனு தாக்கல் தொடங்கிய போது, ஓ.பி.எஸ் தனது அணியின் சார்பில் செந்தில் முருகனை வேட்பாளராக களமிறங்கினார். அதே நேரம் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கே.எஸ் தென்னரசு வேட்பாளராக நிறுத்தப்பட்டார். இவர்களுக்கிடையேனான போட்டியில், உச்சநீதிமன்றம் இரட்டை இலை சின்னத்தை இபிஎஸ் தரப்பு வேட்பாளரான கே.எஸ். தென்னரசுவிற்கு வழங்கியது. இதனை தொடர்ந்து, ஓ.பன்னீர்செல்வம், தனது வேட்பாளரான செந்தில் முருகன் தனது மனுவை திரும்பப் பெறுவார் என்று அறிவித்தார். ஆனால் வேட்புமனுவை வாபஸ் பெறுவதற்கு முன்பு, பரிசீலனையின்போதே அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கில் வேட்பாளராக அறிவித்த செந்தில் முருகனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஓபிஎஸ் இன்று அறிவித்துள்ளார். ஓபிஎஸ் அறிவித்த சில நிமிடங்களிலேயே, செந்தில் முருகன் இபிஎஸ்-ஐ சந்தித்து அதிமுகவில் இணைந்தார்.
இது குறித்து அதிமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் ஓபிஎஸ்-சால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் முருகன், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி தெற்கு ஒன்றியச் செயலாளராக ஓபிஎஸ்-சால் அறிவிக்கப்பட்ட தளவை சுந்தர்ராஜ் ஆகியோர், இன்று அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களைக் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பி.ஜேம்ஸ் லிசா









