ஓ.பி.எஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. இபிஎஸ் தலைமையில் மற்றொரு மாவட்ட செயலாளர் கூட்டம் வரும் 27ம் தேதி நடக்கவுள்ளது. திமுகவில் அடுத்து என்ன ? துளிர்க்குமா இலைகள்…? பார்க்கலாம்….
அதிமுகவின் நீண்ட காலப் பொதுச் செயலாளர் மட்டுமின்றி, நிரந்தரப் பொதுச் செயலாளர் என்று அந்த கட்சியினரால் அழைக்கப்பட்ட ஜெயலலிதா 2016ம் ஆண்டு டிசம்பரில் மறைந்தார். இதற்கு பிறகு அதிரடி சினிமாக் காட்சிகளை மிஞ்சும் நிகழ்வுகள் அதிமுகவில் அடுத்தடுத்து அரங்கேறின. குறிப்பாக, விகே சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்வு, ஓபிஎஸ் தர்மயுத்தம், தமிழ்நாட்டுக்கு வராத ஆளுநர், சொத்து குவிப்பு
வழக்கில் தீர்ப்பு, சிறைக்கு சென்ற சசிகலா, இணைந்த ஓபிஎஸ் – இபிஎஸ், ஆர்.கே.நகரில் டிடிவி தினகரனின் அபார வெற்றி, பதவி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் என பரபரப்பிற்கு பஞ்சமில்லாமல் இருந்தன.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு கட்டத்தில், அமமுக என்கிற தனிக் கட்சி தொடங்கி ஜனநாய ரீதியில் அதிமுகவை மீட்போம் என்று டிடிவி தினகரன் பயணிக்கிறார். ஜெயலலிதாவிற்கு பிறகு பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்ட வி.கே.சசிகலா சட்டப் போராட்டம் நடத்தி அதிமுக மீட்பேன் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இதற்கிடையில், கடந்த ஜூன் மாதம் அதிமுகவில் ஒற்றைத் தலைமை முழக்கத்தால் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு இடையில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் இணைந்து, சசிகலா, தினகரனை நீக்கிய பின்னர் இரட்டை இலையின் இரண்டு இலைகளாக வர்ணிக்கப்பட்ட இருவரும் தனித் தனி பாதையில் பயணிக்க தீர்மானித்து விட்டனர்.
அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் தரப்பை நீக்கி விட்டதாக இபிஎஸ்ஸும், இபிஎஸ் தரப்பை நீக்கி விட்டதாக ஓபிஎஸ்சும் அறிவித்து, தனித் தனியாக இயங்கி வருகின்றனர். தற்போது அதிமுகவில் இருந்து அமமுக என்கிற ஒரு கட்சி, ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா ஆகிய 3 பிரிவுகள் என நான்காக பிரிந்து கிடக்கிறது. அதிமுக ஒருங்கிணைந்தால்தான், வரும் மக்களவைத் தேர்தலில், சிதறாமல் அவர்களின் வாக்குகளைப் பெறலாம் என்று டெல்லி மேலிடம் நினைக்கிறது. மூவர் இசைந்தாலும், இணைப்பிற்கு இப்போது வரை எடப்பாடி பழனிச்சாமி தரப்பு பிடி கொடுக்கவில்லை. ஆனாலும் ஓபிஎஸ் – இபிஎஸ் இருவரையும் இப்போது வரை சம தூரத்தில் வைத்துப் பார்க்கிறது டெல்லி என்கிறார்கள்.
இந்த நிலையிலதான் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தை ஓ.பன்னீர்செல்வம் நடத்தியுள்ளார். குறிப்பாக 80க்கும் மேற்பட்ட மாவட்டச் செயலாளர்கள், 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர். கூட்டத்திற்கு தலைமை வகித்த, கட்சியின் ஆலோசகரும், மூத்த தலைவருமான பண்ட்ருட்டி ராமச்சந்திரன், எடப்பாடி பழனிச்சாமி தரப்பை மறைமுகமாக குறிப்பிட்டு, ’இடைச்செருகல்களை அகற்றுவோம். ஓபிஎஸ் பணிவானவர் மட்டுமல்ல துணிவானவர். அவருடைய துணிச்சலை பொதுக்குழு கூட்டத்தில் நின்ற போது பார்த்தோம்’ என்றார். தொடர்ந்து பேசிய தலைவர்களும் இபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை கடுமையாக விமர்சித்தனர்.
கூட்டத்தில் நிறைவாக பேசிய ஒபிஎஸ், ’கட்சியின் நிரந்தரப் பொதுச் செயலாளர் ஜெயலலிதான்’ என்று அழுத்தமாக பதிவு செய்தார். தைரியம் இருந்தால் தனிக்கட்சித் தொடங்கிப்பார்’ என்று இபிஎஸ்க்கு சவாலும் விட்டார். கட்சி ஒற்றுமைக்காக பல அவமானங்களை சகித்துக் கொண்டேன். தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கத்தை எடப்பாடி பழனிச்சாமி கபளீகரம் செய்ய விட மாட்டேன். அதிமுகவிற்காக உழைத்த அனைவரும் இணைந்து பணியாற்றுவோம் என்றார்.
இதற்கிடையே, கட்சியின் வரவு செலவு கணக்கை இடைக்காலப் பொது செயலாளர்
என்று இபிஎஸ் தரப்பு சம்ர்ப்பித்ததை தேர்தல் ஆணையம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’இது ஒரு விஷயமில்லை. பொருளாளராக நான் கொடுத்த கணக்கைத்தான் கொடுத்துள்ளனர் என்றார்.
மேலும், ஓபிஎஸ் தரப்பினர் ஒரு பொதுக்குழுவை கூட்டி, நாங்கதான் உண்மையான அதிமுக என்று மீண்டும் உரிமை கோரவும் உள்ளனர் என்று கூறப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் ஆட்டத்தில் யாருக்கு வாய்ப்பு என்பது இருதரப்பின் அடுத்தடுத்த செயல்பாடுகளைப் பொருத்தே அமையும். இவர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு உரிமை கோருவதால், இரட்டை இலை யாருக்கும் இல்லாமல் முடக்கம் செய்யப்படலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
பொதுக்குழு குறித்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக வரும் நம்பிக்கை ஓபிஎஸ் தரப்பிற்கு ஒருபக்கம் இருந்தாலும், சாதகமான தீர்ப்பு வரவில்லை என்றாலும் ஓங்கி அடித்து ஆடும் திட்டத்தையும் ஓபிஎஸ் தரப்பு வைத்துள்ளது என்கிறார்கள். அதை வெளிப்பாடும், வழக்கத்தை விட அதிரடியான பேச்சும் காட்டுகிறது என்கிறார்கள். மேலும், ‘ஒன்று பட்டால் உண்டு வாழ்வு. எங்களுக்கே இரட்டை இலை கிடைக்கும்’ என்கிற வைத்தியலிங்கத்தின் பேச்சிற்கு பின்னால் ஒரு கணக்கும் காய் நகர்த்தலும் இருக்கு என்கிறார்கள் மூத்த தலைவர்கள். என்னாவகும் அதிமுகவும் இரட்டை இலையும்…? பொருத்திருந்து பார்க்கலாம்…
link – இது குறித்து சொல் தெரிந்து பகுதியில் ஒளிபரப்பான விரிவான கணொளியைப் பார்க்க…