சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வூகான் மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் கண்டறியப்பட்டது. அங்கிருந்து உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் உலக நாடுகள் அனைத்தும் பொது முடக்கத்தை அமல்படுத்தியும், தடுப்பூசி செலுத்தியும் கொரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில் சீனா, ஜப்பான், தென்கொரியா, பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கொரோனா பரவலை தொடர்ந்து கண்காணிக்குமாறு அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்றை எழுதினார்.
மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா இன்று காலை அவசர ஆலோசனை நடத்தினார். டெல்லியில் இன்று காலை 11 மணிக்கு நடக்கிற கூட்டத்தில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள், எய்ம்ஸ் இயக்குனர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. விழிப்புடன் இருக்கவும், கண்காணிப்பை பலப்படுத்தவும் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவும், முகக்கவசம் கட்டாயம் போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்தநிலையில், சீனாவில் அதிவேக கொரோனா வைரஸ் பரவலுக்கு காரணமாக கருதப்படும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் 2 பேருக்கம், ஒடிசாவில் ஒருவரும் பிஎப்-7 ஒமைக்ரான் திரிபு வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.







