அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீல் நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் முன்னிலையில் இன்று அகற்றப்பட்டு அதிமுக மேலாளரிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழு கடந்த 11ந்தேதி சென்னையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். அப்போது இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக மாறியது. இதில் அதிமுக அலுவலகம் சேதப்படுத்தப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைத்தனர்.
அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ், ஓபிஎஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றக்கோரியும், எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடம் அலுவகத்தின் சாவியை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும் அதிமுக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் ஒரு மாதத்திற்கு தொண்டர்கள் யாரும் அலுவலகத்திற்குள் அனுமதிக்க கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவை தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின்படி மயிலாப்பூர் புதிய வட்டாட்சியர் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்றினார். அதிமுக அலுவலக மேலாளர் மகாலிங்கத்திடம் சாவி ஒப்படைக்கப்பட்டது.








