ஓ.பி.எஸ் கட்சி நடத்தவில்லை கம்பெனி நடத்துகிறார் கட்சியினருக்கு பதவி வழங்க
ஆள் பிடித்து வருகிறார் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேசினார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அதிமுக தொண்டரின் திருமணத்திற்கு வந்திருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், ஓ.பி.எஸ் ஆரம்பத்திலிருந்தே சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரோடு தொடர்ந்து தொடர்பிலிருந்து கொண்டு தான் வந்து உள்ளார் வருகிறார். அவர் தினகரனைச் சந்திப்பது ஒன்றும் புதிதில்லை என்றார்.
அதிமுகவில் 99 சதவீதம் தொண்டர்கள் எடப்பாடியார் அவர்களை இடைக்கால பொதுச்செயலாளராக ஏற்றுக்கொண்டு உள்ளனர். இன்றைக்குக் கழகம் வலுவாக இருக்கிறது.1 சதவீதம் கூட தொண்டர்கள் இல்லாத ஓ.பி.எஸ்.எப்படி பொதுக்குழுவை நடத்த முடியும். அது பொதுக் குழு அல்ல பொய்க் குழு எனவும் விமர்சித்தார்.
ஓ.பி.எஸ்.கம்பெனிக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்து இருக்கிறார்.ஓ.பி.எஸ்.ன கட்சி இல்லை நிறுவனம். இன்றைக்குக் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்களுக்குப் பொறுப்பு கொடுத்து கேலிக்கூத்து செய்து வருகிறார் என்றார்.
இன்றைக்கு அதிமுகவில் உள்ளவர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள். தேர்தல் நேரத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் திமுகவிடம் கூட்டணியில் உள்ள கட்சிகள் கூட வரலாம். ஏன் என்றால் திமுக மீது மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். மின்கட்டணம், சொத்துவரி, பால் விலை உயர்வு உள்ளிட்டவை மக்களைக் கடுமையாகப் பாதித்து உள்ளது என கூறினார்.
மேலும், திமுக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது. வாய்மை வெல்லும் இன்றைக்குப் பொய்மை வெல்லும் அரசு தான் தமிழகத்தை ஆண்டுகொண்டு உள்ளது. தமிழகத்தில் அவுட்சோர்சிங் முறையின் மூலம் திமுக சமூக நீதி கொள்கைக்கு எதிராகத் தான் செயல்பட்டு வருகிறது எனவும் பேசினார்.
நீட் ரத்து என கூறி திமுக அரசு மாணவர்களை ஏமாற்றி வருகிறது. இவர்கள் கடந்த அதிமுக அரசு கொண்டுவந்த மக்கள் நலன் திட்டங்களை திமுக அரசு மூடி உள்ளது. குறிப்பாகத் தாலிக்குத் தங்கம் ,இரு சக்கர வாகன திட்டம்.பெட்ரோல் டீசல் ஜிஎஸ்டிக்குள் கொண்டு வருவதில் திமுக அமைச்சர்களுக்குள்ளேயே வேறுபட்ட கருத்துகளுடன் முரண்பாடு உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பிரச்சினைகள் உள்ள நிலையில் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் அவரது மகனுக்கும் லவ் டுடே டிஸ்கஸ்தான் நடந்து கொண்டு உள்ளது எனவும் பேசினார்.
கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை முடக்குவதைத் தவிர இந்த அரசு வேறு எந்த திட்டங்களையும் கொண்டு வர வில்லை. மழை பாதித்த பகுதிகளைத் தமிழக முதல்வர் பார்வையிடாமல் போட்டோ சூட் நடத்தி வந்து உள்ளார். அவர் நடத்துவது ஆய்வு இல்லை போட்டோ சூட். அந்த மாவட்டத்திற்கு எந்த பிரச்சினை என்று கேட்க வில்லை. சென்னையில் கொளத்தூர் தொகுதியில் மழை பாதிப்பு குறித்து செய்தி எடுக்க எந்த செய்தியாளரும் செல்ல முடியவில்லை திமுக அடி ஆட்களை வைத்து கொண்டு இரும்பு திரை போல நடக்கிறது என்றார்.
விஞ்ஞானம் மூலம் ஊழல் செய்த கட்சி திமுக. திமுக பொறுத்தவரையில் எந்த ஒரு திட்டத்தையும் ஆதாயம் இல்லாமல் செய்யாது. திமுக அரசு கேபிள் நிறுவனத்தை முடக்கிவிட்டு, அவர்களது சொந்தமான நிறுவனங்களுக்குத் தர முன்வருகிறது எனவும் பேசினார்.







