அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்ஸை நீக்கும் தீர்மானத்தை இடைக்கால பொதுச்செயலாளர் கொண்டு வருவார் என கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கான அதிகாரங்கள் பொதுச் செயலாளருக்கும் வழங்கியும், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு பதில் துணை பொதுச் செயலாளர் என மாற்றம் செய்யப்பட்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னணி தலைவர்கள் வாழ்த்திப் பேசி வந்தனர். நத்தம் விஸ்வநாதன் பேசிக்கொண்டிருக்கையில், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் முழக்கம் எழுப்பினர்.
அப்போது மைக்கைப் பிடித்த கே.பி.முனுசாமி, “பொதுக்குழு உறுப்பினர்களின் உணர்வுகள் ஒன்றரை கோடி தொண்டர்களின் உணர்வுகளாக பிரதிபலிக்கிறது. தொண்டர்களின் உணர்வுகள் நிறைவேற்றப்படும். ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்ற பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையையடுத்து, அவரை நீக்கும் தீர்மானத்தை அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவருவார். அதுவரை பொறுமையாக இருங்கள்” என்று அறிவித்தார்.