மு.க.ஸ்டாலின் பிரதமர் ஆகும் வாய்ப்புள்ளது என திமுக செய்தி தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார் பேசியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் திமுக அரசின் ஓராண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்டச் செயலாளர் மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய திமுக செய்தித் தொடர்பு செயலாளர் பி.டி.அரசகுமார், அதிமுகவினர் அவர்களாகவே அழிந்து வருகின்றனர், அவர்களை அழிக்கிற பணியை திமுக செய்யவேண்டிய அவசியமில்லை, ஆனால் நாட்டின் பிரச்னைகளை சீர்தூக்கிப் பார்க்கின்ற நிலைப்பாட்டில் திமுக இருக்கிறது என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் நள்ளிரவிலும் உறங்காமல் பணி செய்கிறார், அவருக்கென தனிப்பட்ட கவலைகள் இல்லை, தமிழகத்தை கடனிலிருந்து மீட்டெடுத்து மீண்டும் தமிழகத்தை இந்தியாவின் முதன்மை மாநிலமாக உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்தில் உரக்கத்தை இழந்து உழைத்து வருகிறார் என்று குறிப்பிட்ட அரசகுமார், மு.க.ஸ்டாலினுக்கு பிரதமராகும் வாய்ப்பு உள்ளது, இதை இந்திய நாட்டில் உள்ள அனைத்து தலைவர்களும் ஏற்றுக் கொண்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், “ நாட்டில் தெற்கு வடக்கு என திரும்பியுள்ள கட்சிகளை இணைத்து மொழி கடந்து மதம் கடந்து ஒன்றிணைத்து நாட்டின் தலைவரை தேர்வு செய்யும் இடத்தில், தேர்வு ஆகும் இடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இருப்பார்” எனவும் அரசகுமார் பேசினார்.







