மசினகுடி அருகே வாழைத்தோட்டம் பகுதியில் கிராமத்தில் புகுந்த காட்டு யானையை நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் வனத்துறையினர் அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டினர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம்
கிராம பகுதியில் காட்டுயானை உலா வருவதை கண்காணிக்க வனத்துறை சார்பில் குழு
அமைக்கப்பட்டது. மேலும், கிராமத்திற்குள் வருவதை தடுக்கும் வகையில் நாள்தோறும்
வனக்குழுவினர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அதிகாலை வாழைத்தோட்டம் கிராமத்திற்கு திடீரென இந்த காட்டு யானை உலா வந்தது. நீண்ட நேரம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் மரக்கிளைகளை உடைத்து
சாப்பிட்டு கொண்டிருந்தது. இதனால் குடியிருப்பு வாசிகள் மிகுந்த அச்சம்
அடைந்ததோடு வீடுகளை விட்டு வெளியே வராமல் உள்ளயே தஞ்சம் அடைந்தனர்.
மேலும், வனத்துறையினர் வாகனத்தின் மூலம் யானையை விரட்டும் பணியில் ஈடுபடும் போது, யானை இரண்டு முறை வனத்துறை வாகனத்தின் முன் நின்று அவர்களை தாக்க முயன்று உள்ளது. இதனால் வனத்துறையினரும் அச்சம் அடைந்தனர்.
நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின் யானையை வனத்துறையினர் அடர்ந்த வனப்
பகுதிக்குள் விரட்டினர். இது போன்று காட்டு யானை திடீரென கிராமத்திற்குள் உலா
வருவது கிராம மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ம. ஶ்ரீ மரகதம்







