வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே வீட்டில் நடத்தி வந்த சிறு
தீப்பெட்டி தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில், சிகிச்சை
பலனின்றி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உசூராம்பட்டி பகுதியில் முருகையன்
என்பவர் அனுமதி பெற்று, வீட்டில் சிறு தீப்பெட்டி தொழிற்சாலை நடத்தி
வருகிறார். இதனிடையே இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டு வீடு
முழுவதும் புகை சூழ்ந்தது. இதனால், வீட்டிலிருந்த சுகுணா என்ற பெண்
மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கம் அடைந்துள்ளார்.
மேலும், முருகையனுக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக
அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு, சிகிச்சைக்காக குடியாத்தம்
அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த
குடியாத்தம் தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுகுணா
சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும், காயமடைந்த முருகையன்
குடியாத்தம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த தீ விபத்து குறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து
விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கு. பாலமுருகன்







