திரைப்பட பாடகி சின்மயின் உறவினரிடம் ஆன்லைன் மோசடி மூலம் லட்சக்கணக்கில் கும்பல் ஒன்று பணம் திருடியுள்ளது.
திரைப்பட பாடகி சின்மயியின் உறவினர் ரவீந்திரன். இவர் சென்னையில் அபிராமபுரத்தில் வசித்து வருகிறார். கடந்த 11 ஆம் தேதி இவருக்கு மெசேஜ் ஒன்று வந்துள்ளது. அதில், உங்களது மின்சார கட்டணம் செலுத்தவில்லை என்றும் உடனடியாக சேவையை தடை செய்யப்போவதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் மெசேஜில் உள்ள எண்ணை தொடர்பு கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டு இருந்தது. இதையடுத்து ரவீந்திரன் அந்த எண்ணை தொடர்பு கொண்டார். அப்போது எதிரில் பேசியவர், உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பப்படும் என்றும், அதனை கிளிக் செய்து மின்சார பயனிட்டாளர் எண் மற்றும் 10 ரூபாய் பணம் கட்டுங்கள் என்று
கூறியுள்ளார்.
ரவீந்திரன் எஸ்பிஐ டெபிட் கார்டு மூலம் 10 ரூபாய் செலுத்த முயன்றுள்ளார்.
ஆனால் தொழில்நுட்ப கோளாறு என்று வந்துள்ளது. இது பற்றி ரவீந்திரன் லிங்க்
அனுப்பியவரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த நபர் வேறொரு நபரின் டெபிட்
கார்டு நம்பரை கேட்டு பெற்றார். மேலும் அந்த டெபிட்கார்டின் பாஸ்வேர்டை
பெற்றார்.
அந்த நபர் சுமார் 1 மணி நேரமாக ரவீந்திரனிடம் பேசினார். இதன் பிறகு
ரவீந்திரனின் உறவினரான சின்மயி அந்த நபரிடம் இந்த பிரச்னை குறித்து பேசியபோது
இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து சிறிது நேரத்திலேயே ரவீந்திரன் வங்கி
கணக்கில் இருந்து சிறிது சிறிதாக ரூ. 5.83 லட்சம் பணம் திருடப்பட்டது.
அதிர்ச்சியடைந்த ரவீந்திரன் தனது உறவினரும் பாடகியுமான சின்மயியை அழைத்து
கொண்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இன்று புகார் கொடுத்துள்ளார். இந்த மோசடி தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.







