மதுரை ஆதரவற்ற முகாமில் ஏற்கனவே ஆண்குழந்தை மாயமான நிலையில் மேலும் ஒரு பெண் குழந்தை மாயமாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ரிசர்வ் லைன் காவலர் குடியிருப்பு பகுதியில் முதியோர் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி கிராமத்தை சேர்ந்த மனநலம் குன்றிய, ஆதரவற்ற ஐஸ்வர்யா என்ற பெண்ணும், அவரது 3 குழந்தையும் 4 மாதங்களாக தங்கியிருந்தனர். ஐஸ்வர்யாவின் ஒரு வயது ஆண் குழந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 11ம் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் அந்த குழந்தை கொரோனாவால் உயிரிழந்துவிட்டதாக போலியான சான்றிதழை காட்டி, தத்தனேரி மயானத்தில் புதைத்துள்ளனர். ஐஸ்வர்யாவை அந்த இல்லத்தில் அனுதித்த சமூக ஆர்வலர் இதுகுறித்து அறிந்து, விசாரித்துள்ளார். மேலும், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கான சான்றிதழ்களை வாங்கி பார்த்துள் ளார். அவை அனைத்தும் போலியானவை என்பதை அறிந்து, மாவட்ட ஆட்சியரிடம் அவர் புகார் அளித்தார்.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள கொரோனா பிரிவில் அந்த குழந்தையை அனுமதிப்பதற்கான பரிந்துரை கடிதத்தை இல்ல நிர்வாகிகள் வைத்துள்ளனர். எனினும், குழந்தை அனுமதிக்கப்படவில்லை என்று புகாரில் கூறப்பட்டுள்ளது. ஆட்சியரின் உத்தரவின்பேரில் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், வட்டாச்சியர், காவல்துறையினர் ஆகியோர் விசாரணை நடத்தினர். போலி ஆவணங்களை பறிமுதல் செய்த போலீசார், தலைமறைவாக உள்ள தொண்டு நிறுவன இயக்குநர் சிவக்குமாரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வருவாய்த் துறை, சமூக நலத்துறை, குழந்தை நலத்துறை, காவல்துறையினர் அங்கு விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஸ்ரீதேவி என்ற பெண்ணின் 2 வயது குழந்தை தனம்மாள் மாயமானது தெரியவந்தது. குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என 10 தினங்களுக்கு முன்பு அழைத்துச் சென்ற நிலையில் மீண்டும் பெற்றோரிடம் ஒப்படைக்கவில்லை என புகார் கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒரு வயது ஆண் குழந்தை மாயமான நிலையில், தற்போது மேலும் ஒரு குழந்தை மாயமாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தச் சம்பவத்தை அடுத்து, முகாமில் உள்ள அனைவரும் வேறு காப்பகத்துக்கு மாற்றப்பட்டுள்ளனர்.







