ஆந்திராவிலிருந்து சென்னைக்கு நகை வாங்க வந்த நகை வியாபாரிகளிடமிருந்து போலீஸ் போல நடித்து ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை கொள்ளை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் சுப்பாராவ். நகைவியபாரியான இவர் தனது மேலாளர் ரகுமானுடன் இன்று காலை ஆந்திராவில் இருந்து தனியார் பேருந்து மூலமாக சென்னை வந்துள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் வந்து இறங்கிய அவர், அங்கிருந்து ஒன்றரை கோடி ரூபாய் பணத்துடன் வீரப்பன் சாலை வழியாக ஆட்டோவில் சென்றுள்ளார். அப்போது வீரப்பன் தெரு மற்றும் துரைசிங்கம் தெரு சந்திப்பில் கார் ஒன்று, சுப்பாராவ் சென்ற ஆட்டோவை வழிமறித்து நிறுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதையடுத்து டிப்டாபாக காரில் இருந்து இறங்கிய கும்பல் ஒன்று சுப்பாராவ் சென்ற ஆட்டோவையும், பையையும் சோதனையிட வேண்டும் என கூறியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த சுப்பாராவ், மேலாளர் ரகுமான் ஆகிய இருவரிடமும், நாங்கள் காவல்துறையயை சேர்ந்தவர்கள். உரிய ஆவணம் இல்லாமல் பணம் இருப்பது தொடர்பாக ரகசிய தகவல் கிடைத்து சோதனை நடத்த வந்ததாக கூறியுள்ளனர்.
இந்த நிலையில் மர்ம கும்பல் வந்த காரில் லத்தி மற்றும் கைவிலங்குகள் இருந்ததை பார்த்த நகை வியாபாரி சுப்பாராவ் மற்றும் அவரது மேலாளர் ரகுமான் உண்மையிலேயே அவர்களை போலீஸ் என நினைத்து தங்களிடம் இருந்த பணத்தை பையுடன் கொடுத்துள்ளனர். பணத்தை பெற்றுகொண்ட அந்த கும்பல் அங்கிருந்து அவசர அவசராக வாகனத்தை எடுத்து சென்றுள்ளனர்.
சிறிது நேரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த இருவரும் யானை கவுனி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரை பெற்றுக்கொண்ட யானைக்கவுனி போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து காரில் வந்த நபர்கள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் போலீஸ் எனக் கூறி ஒன்றரை கோடி ரூபாய் பணத்தை அடித்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்தில் வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்யா பாரதி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
மேலும் பிரதான வணிக பகுதியான பாரிமுனை, பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மொத்த நகை பட்டறை தொழிலாளர்களிடமிருந்து நகையை வாங்கி ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. அவ்வாறு நகை வாங்க வரும் சிலர் கொண்டுவரும் பணத்திற்கு உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வரும் போது போலீசார் வாகன தணிக்கையில் சிக்குவதும்
அவ்வப்போது நடந்து வருகிறது.
இதனை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் அதே பாணியில் நகை வியாபாரிடமிருந்து பணத்தை திருடி சென்றார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- பி.ஜேம்ஸ் லிசா