ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள்…

பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள் அளவுக்கு மீறி கட்டணத்தை உயர்த்துவதும், இதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் வாடிக்கையாகிவிட்டது. பொதுவாக, பொங்கல், ஆயுத பூஜை, தீபாவளி போன்ற பண்டிகைகள் வரும் போதும், வார இறுதி நாட்களிலும் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு அதிக மக்கள் செல்வது வழக்கம்.

அந்த சமயங்களில் ஆம்னி பேருந்துகள் குளிர்சாதன படுக்கை வசதி கொண்ட பேருந்துகளில் ரூ.2000 முதல் ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆதாரத்துடன் செய்திகள் வருகின்றன. குளிர்சாதனமில்லாத படுக்கை வசதி கொண்ட பேருந்து மற்றும் அமரும் வசதி கொண்ட பேருந்துகளில் வழக்கத்தை விட இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் தகவல்கள் வருகின்றன.இந்த பேருந்து கட்டணம் கிட்டத்தட்ட விமான கட்டணத்திற்கு இணையாக உள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த தீராத பிரச்னைக்கு தமிழ்நாடு அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும், பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசு பேருந்துகளை அதிக அளவில் இயக்குவதும், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் விதிக்கப்பட வேண்டிய பேருந்து கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்வதும் இந்த பிரச்னைக்கு தீர்வாக அமையும் என்பதும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இதனை செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசுக்கு நிச்சம் உண்டு.

எனவே பண்டிகை காலங்களிலும், விடுமுறை நாட்களிலும் அரசு பேருந்துகளை அதிக அளவில் இயக்கவும், ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக சார்பில் கேட்டுகொள்வதாக அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.