கனமழை காரணமாக வீட்டை இழந்து, கழிவறையில் வசிக்கும் அவலநிலைக்கு மூதாட்டி ஒருவர் தள்ளப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மல்லல் ஊராட்சிக்குட்பட்ட பில்லத்தி கிராமத்தில் வசிப்பவர் 70 வயது மூதாட்டி அம்மாக்கண்ணு. கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாக அம்மாக்கண்ணுவின் வீடு திடீரென இடிந்து விழுந்தது.
இதனையடுத்து அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூதாட்டி மீட்கப்பட்டார். பின்பு வசிக்க வேறு இடம் இல்லாததால் இடிந்த வீட்டின் முன்பாக கட்டப்பட்டுள்ள தனிநபர் கழிவறையில் தனது பொருட்களை வைத்துக்கொண்டு, அதன் அருகிலேயே சமைத்துக் கொண்டும், கண்மாய் கரையில் கூடாரம் அமைத்து வசித்து வருகிறார். இதுவரை எந்த அதிகாரியும் வந்து பார்க்கவில்லை என்று கண்ணீர் தொய்ந்த குரலில் கூறினார் அம்மாக்கண்ணு.
இதைத் தொடர்ந்து முதியோர் உதவி தொகை கூட வராமல் மிகவும் கஷ்டத்தில் இருக்கும் மூதாட்டி அம்மாக்கண்ணக்கு, மாவட்ட ஆட்சியர் நிவாரண தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் வீடு இன்றி சிரமப்பட்டு வருவதால், வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே, மூதாட்டி அம்மாக்கண்ணு நியூஸ் 7 தமிழ் மூலம் அரசுக்கு விடுக்கும் கோரிக்கையாக உள்ளது.








