கடலூர், விழுப்புரத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோர பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கும் என்றும் அடுத்த 3 நாட்களுக்கு மேற்கு நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில், வருகிற நவம்பர் 3ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பும், சில மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வு மைய அதிகாரிகள் கூறினர்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டது. எனினும், தொடர் கனமழையால் நெல்லை, விழுப்புரம், வேலூர், கள்ளக்குறிச்சி, திருவாரூர் மற்றும் கடலூர் மாவட்ட பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இன்று கடலூரில் தொடர் கனமழை எதிரொலியாக பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று அரியலுர், விழுப்புரம் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.







