உதகை மார்க்கெட் வளாகம் மற்றும் நகரில் உள்ள மீன் கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 100 கிலோ கெட்டுப்போன
மீன்களை கண்டுபிடித்து அழித்தனர்.
நீலகிரி மாவட்டம், உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் சாலை மற்றும்
சேரிங்கிராஸ் உட்படபல இடங்களில் மீன் கடைகள் உள்ளன. மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மலின் எனப்படும் ரசாயனம் கலந்து, மீன்கள் பதப்படுத்தப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து, மீன்வளத் துறை அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
இவர்கள் உதகை நகராட்சி மார்க்கெட், மெயின் பஜார் பகுதியில் உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட மீன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 10 கடைகளில் , கெட்டுப் போன மீன்கள் சுமார் 100 கிலோ விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல்
செய்து, பினாயில் ஊற்றி அழித்தனர்.
தரமற்ற மீன்கள் விற்பனைக்கு வைத்திருந்த 8 கடை உரிமையாளர்களுக்கு
அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், தரமான மீன்களை மட்டுமே விற்பனை
செய்ய வேண்டும், கடைகளை தூய்மையாக பராமரிக்கவேண்டும் என மீன்
விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
—கு.பாலமுருகன்






