உள்ளாட்சித் தேர்தலில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டுமென திமுக எம்.பி வில்சன் வலியுறுத்தியுள்ளார்.
மாநிலங்களவை நேரமில்லா நேரத்தில் உரையாற்றிய திமுக எம்.பி வில்சன், “உள்ளாட்சித் தேர்தல்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 1992ம் ஆண்டு இடஒதுக்கீடு கொண்டுவரப்பட்டது. இடஒதுக்கீடு கொண்டு வரப்பட்டு 28 ஆண்டுகள் ஆன போதிலும் இதுவரை அமல்படுத்தப்படவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பட்டியல், பழங்குடியினர் தவிர மற்ற அனைத்து சாதிகளின் அடிப்படையில் சமூக பொருளாதார சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தீர்மானம் கடந்த 2011ஆம் ஆண்டு மக்களவையில் நிறைவேற்றப்பட்டது என்று குறிப்பிட்ட வில்சன், சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகளை 2015ஆம் ஆண்டு மத்திய அரசு பெற்றுக்கொண்டது எனத் தெரிவித்தார்.
இந்த தரவுகளில் உள்ள குறைகளை கண்டுபிடிக்க நிதி ஆயோக் கீழ் நிபுணர் குழு அமைக்க பிரதமர் தலைமையிலான அமைச்சரவைக் குழு முடிவு செய்தது. ஆனால், இதுவரை அந்த நிபுணர் குழு செயல்பட அனுமதிக்கப்படவில்லை என்றும் விளக்கினார்.
ஒருபக்கம் அரசியலமைப்பு ஒபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்குகிறது என்றும், மறுபக்கம், சாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவை வெளியிடுவதற்கு மத்திய அரசுக்கு விருப்பம் இல்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், இதனால் சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை மாநிலங்களால் பெற முடியவில்லை. கணக்கெடுப்பு தரவுகள் இல்லாததால் மாநிலங்களின் இட ஒதுக்கீட்டு கொள்கைகளை நீதிமன்றங்கள் புறந்தள்ளுகின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
சாதிவாரி கணக்கெடுப்பை மாநில அரசுகள் நடத்த முடியாது. ஏனெனில், அது அரசியலமைப்பின் 7வது அட்டவணையில் மத்திய பட்டியலில் உள்ளது . சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகள் மாநிலங்களுக்கு கிடைக்கக் கூடாது என்பதுதான் மத்திய அரசின் நோக்கமா எனவும் கேள்வி எழுப்பினார்.
மேலும், இதில் பிரதமர் உடனடியாக தலையிட்டு 2011 சாதிவாரி கணக்கெடுப்பு தரவுகளை வெளியிடச் செய்ய வேண்டும். அல்லது மாநில அரசுகள் சேகரிக்கும் தரவுகள் அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க அரசமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். உள்ளாட்சி தேர்தல்களில் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கி சமூக நீதியை நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.