ஓ.பன்னீர்செல்வம் தான் அதிமுகவுக்கு தலைமை ஏற்க வேண்டும் என தனியரசு கூறியுள்ளார்.
அதிமுகவில் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த அரசியல் அரங்கிலேயே விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது ஒற்றைத் தலைமை விவகாரம். ஒற்றைத் தலைமை என்பது சரியானது அல்ல, இரட்டைத் தலைமை நன்றாக சென்றுகொண்டிருப்பதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்த கருத்துக்கு எடப்பாடி பழனிசாமி இன்னும் கருத்து எதுவும் சொல்லவில்லை. இதுபற்றி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவரும் தனித்தனியாக ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் சென்னை பசுமை வழிச் சாலையிலுள்ள ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் அவரை கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் தனியரசு இன்று நேரில் சந்தித்து ஆதரவளித்தார். சிறிது நேரம் உரையாடிய பின்னர் வெளியே வந்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.
அப்போது, ஓ.பன்னீர்செல்வம் தான் ஒற்றைத் தலைமையை ஏற்க வேண்டும். இந்த முறை ஓபிஎஸ் விட்டுத்தரப் போவதில்லை, அதில் உறுதியாக இருக்கிறார் என்ற தனியரசு, ஓ.பி.எஸ் தலைமை ஏற்றால் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவினர் இணைவார்கள் எனவும் கூறினார்.
மேலும், “எடப்பாடி பழனிசாமி ஒரு சார்பாக செயல்படுகிறார். அவருக்கு அதிகாரத்தை ஓபிஎஸ் விட்டுக்கொடுக்கக் கூடாது. அதிமுகவின் தோழமை என்பதால் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளேன். மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே இபிஎஸுக்கு ஆதரவாக உள்ளனர். தொண்டர்கள் அனைவரும் ஓபிஎஸ் பக்கம் உள்ளனர்” என்றும் கூறினார்.