தேனி எம்பி ஒ.பி.ரவீந்திரநாத்-ன் வெற்றி செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
2019ம் ஆண்டு நடந்த மக்களவை பொதுத் தேர்தலில், தேனி தொகுதியில்
அதிமுக சார்பில் ஓ.பி.ரவீந்திரநாத் போட்டியிட்டு 76,319 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி தேனி தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
மேலும், பண பட்டுவாடா, வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்று கடந்த மாதம் 6-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்நிலையில், இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில், ஓ.பி.ரவீந்திரநாத்தின் தேர்தல் வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.








