தமிழ்நாட்டில் சொகுசு கார்கள் உட்பட அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த போக்குவரத்து துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பதிவு செய்யப்படும் கார்களில் குறிப்பிட்ட மாடல்களை மட்டுமே,
வாடகைக்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மற்ற மாநிலங்களைப் போல் தமிழகத்திலும் அனைத்து வகை கார்களையும் வாடகைக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என வாடகை வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
அதன்படி தமிழகத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், அனைத்து வகை கார்களையும் வாடகை வாகனங்களாக பயன்படுத்த அனுமதி வழங்கபடுவதாக போக்குவரத்து துறை சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் தனிநபர் பயன்பாட்டுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்ட கார்களையும் இனி மஞ்சள் எண் பலகையுடன் வாடகைக்கு இயக்க முடியும்.







