தொழில்துறையில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்கள் சமீப நாட்களாக பரவும் வதந்தி காரணமாக, சொந்த ஊருக்கு திரும்புவதாக கூறிவரும் நிலையில், கடந்த 20 நாட்களில் கோவையில் 40 கோடி ரூபாய் வரை சிறு, குறு நிறுவனங்களில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்கள் திரும்ப வர மாட்டார்கள் என்ற அச்சம் நிலவுவதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பீகாரில் பரவி வரும் வதந்தி
காரணமாக கோவையில் வடமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊருக்கு திரும்புகிறோம் என்று கூறுவதாகவும், வடமாநில தொழிலாளர்கள் சென்றால் உற்பத்தி பாதிக்கப்படும் எனவும், இதனை தடுக்க கோரியும் 27 தொழில் கூட்டமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த சுரளிவேல் – போசியா கூட்டமைப்பினர், “வடமாநில தொழிலாளர்கள் அச்சத்தின் காரணமாக ஊருக்கு கிளம்புவதாக கூறுகிறார்கள். தொழில்துறையில் ஒவ்வொரு இடத்திலும் வடமாநில தொழிலாளர்களின் பங்கு அதிகமாக இருக்கிறது. எங்களது நிறுவனங்களில் ஐம்பது சதவீதமும், நூற்பாலைகளில் 80 சதவீதமும் வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். வரும் 7ம் தேதி சம்பளம் கொடுத்து விட்டால், அவர்கள் ஊருக்கு சென்று விடுவார்கள். ஹோலியை காரணம் காட்டி செல்பவர்கள் திரும்ப வருவார்களா என தெரியவில்லை. இதை கட்டுப்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தனர்.
இதையும் படியுங்கள் : வடமாநில தொழிலாளர் விவகாரம்; வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
மின்பொருட்கள் சார்ந்த தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் தலைவர் சுரேந்திரன் அளித்த பேட்டியில், “எங்களது நிறுவனத்தில் 80 சதவீதம் பேர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தான். நமது மாநிலத்தை காட்டிலும் பீகாரில் வதந்தி அதிகமாக பரவியதன் காரணமாக இங்கு வேலை செய்பவர்களின் பெற்றோர்கள் ஊருக்கு திரும்பி வருமாறு அழைத்து வருகிறார்கள். இதுவரை எனக்கே பத்துக்கும் மேற்பட்ட பெற்றோர்கள் அழைத்து, திருப்பி அனுப்பும்படி கூறினர்.
விடுமுறைக்கு சென்று திரும்பி வந்து 10 நாட்கள் ஆன சிலர் பெட்டியுடன் ஊருக்கு செல்வதற்காக தயாராகி உள்ளனர். இன்றும் நாளையும் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் போகும். மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து காவல்துறை மூலம் தடுத்து நிறுத்த வேண்டும்.
வேலை செய்வதற்கு தொழிலாளர்களே இல்லை. வேலைக்கு ஆட்களே கிடையாது. எவ்வளவு பேர் வந்தாலும் வேலைக்கு எடுத்துக்கொள்ள தயாராக உள்ளோம். தமிழகத்தில் ஆட்கள் குறைவு. வடமாநில தொழிலாளர்களுக்கு சம்பளம் குறைவாக கொடுப்பது வதந்தி. அதிக நேரம் வேலை செய்பவர்களுக்கு, அதற்கு உரிய ஊதியம் வழங்கப்படுகிறது. மாதம் ரூபாய் 40,000 வரை சம்பளம் பெறுகிறார்கள். இந்த ஆண்டு முடிவில் 60 சதவீதம் வரை தொழில்துறை பாதிக்கப்படும். இதனை தடுக்க ரயில் நிலையங்களில், இந்தியில் நோட்டீஸ் அடித்து வழங்குவதோடு, ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.
அதேபோல் ஜேம்ஸ்- டேக்ட் அமைப்பினர் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் நேற்று முதல் பல்வேறு தொழிற்சாலைகளில் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு திரும்ப வேண்டும் என கூறி வருகிறார்கள். இதன் காரணமாக தொழில் துறை பாதிப்புக்குள்ளாகி உள்ளது. கோவை மாவட்டத்திற்கு மட்டும் 5 லட்சம் ஸ்கில்டு லேபர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் பணியிடத்தை விட்டு சொந்த ஊருக்கு செல்வார்களானால் கடுமையான நெருக்கடியை தொழில்துறை சந்திக்கும்.
பல்வேறு நெருக்கடிகளை தொழில்துறை சந்தித்து, அதிலிருந்து மீண்டு வரும்போது, இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டுள்ளோம். கோவை மாவட்டத்தில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த உள்ளதாக மாவட்ட ஆட்சியரும் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்கள் உற்பத்தி துறையில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றனர். உள்மாநிலத்தில் உள்ள தொழிலாளர்கள் பணிக்கு வராத காரணத்தால், வடமாநிலத் தொழிலாளர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம்.
தமிழகத் தொழிலாளர்கள் பெரும்பாலும் சேவை துறையை தான் விரும்புகிறார்கள். உற்பத்தி துறையை தமிழகத்தில் உள்ளவர்கள் மறுக்கிறார்கள். இதுபோன்ற காலங்களில் தான் புலம்பெயர் தொழிலாளர்களை பயன்படுத்தி வருகிறோம். தமிழகத்தில் உள்ள தொழிலாளர்களை புறக்கணித்து, வடமாநில தொழிலாளர்கள் வேண்டும் என்ற போக்கில் தொழில்துறை ஒருபோதும் செயல்படுவதில்லை.
10 ஆண்டுகளுக்கும் மேலாக பணி செய்து அனைத்து தொழில்களும் கற்றுத் தேர்ந்தவர்களாக புலம்பெயர் தொழிலாளர்கள் மாறி உள்ள நிலையில், இவர்கள் இதனை விட்டுச் செல்லும் போது உற்பத்தித் துறை மட்டுமின்றி தொழில்துறையும் பெரும் பாதிப்புக்குள்ளாகும். சிறு, குறு தொழில் நிறுவனங்களில் ஒவ்வொரு வேலைக்கும் பொருத்தமாக வடமாநில தொழிலாளர்கள் வந்துவிட்டதால், அவர்களை போக வேண்டாம் எனத் தடுக்கிறோம். அவர்கள் திரும்ப வர மாட்டார்கள் என்ற அச்சத்தில்தான் தொழில்துறையினர் இருக்கின்றனர். கடந்த இரு தினங்களில் 40 கோடி வரை உற்பத்தி பாதிக்கப்பட்டு இருக்கிறது” என்று தெரிவித்தனர்.