வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் வதந்தி பரப்பியதாக 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 3 பேரை கைது செய்துள்ளதாகவும் டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பாக கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் பரவி வரும்
வதந்தி தொடர்பாக கோவை சரகத்தில் உள்ள தொழில்துறையினர் மற்றும் தொழில்
முனைவோர்களுடன் காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு கலந்துரையாடினார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த டிஜி.பி., புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையில் சாதாரண நிலை திரும்ப உதவிய தொழில் துறையினர் மற்றும் காவல்
துறைக்கு, பத்திரிகை துறையினருக்கு நன்றி. தற்போது நிலைமை ஓரளவு
நன்றாக இருக்கிறது. இருந்தாலும் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம், ஏனென்றால்
தொடர்ந்து பொய்யான செய்திகளை ஒரு சிலர் பரப்பி வருகிறார்கள். அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து வருகிறோம்.
இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். மற்றவர்களை கைது செய்வதற்கு தனிப்படையினர் டெல்லி, போபால், பெங்களூர், பாட்னா உள்ளிட்ட இடங்களில் முகாமிட்டிருக்கிறார்கள். ஒரு சிலர் தலைமறைவாகி இருக்கிறார்கள்.
ஒரு சிலர் நீதிமன்றத்தை நாடி இருக்கிறார்கள். பெருமளவு இந்த வதந்தி, வீடியோக்கள் குறைந்திருக்கிறது. இருந்தாலும் இந்த சூழ்நிலை அசாதாரண சூழ்நிலையாக இருப்பதால் தொடர்ந்து புலம்பெயர் தொழிலாளர்களுடன் ஒரு உரையாடல்
வைத்துக் கொள்ள வேண்டும் என தொழிலதிபர்களிடம் அறிவுறுத்தியுள்ளோம்.
காவல்துறை அதிகாரிகளும் புலம் பெயர் தொழிலாளர்களிடம் சென்று தைரியம் அளிக்க வேண்டும் எனவும், அவர்களில் ஒரு தொழிற்சாலைக்கு ஒரு நபரை மட்டும் whatsapp குழுவில் சேர்த்து தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், ரோந்து பணிகளை மேற்கொள்ளவும், அவர்கள் குடியிருக்கும் பகுதிகளில் சிசிடிவி கேமராக்கள் வைத்து பாதுகாப்பு அளிக்கவும் கூறியுள்ளோம்.
இதுவரை 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. புலன் விசாரணையில் இதன்
பின்புலத்தில் யார் இருப்பார்கள் என்பது தெரியவரும். எதற்காக பொய்யான
தகவல் பரப்பினார்கள்? அதுவும் அப்பட்டமாக வெறுக்கத்தக்க வகையில்
தமிழ்நாட்டுக்கு சம்பந்தம் இல்லாத வீடியோக்களை பதிவிட்டு தமிழ்நாட்டில்
நடந்துள்ளதாக சொல்ல வேண்டியது காரணம் என்ன? என்பது தொடர்பாக அவர்கள் கைது செய்யும்போது தெரியவரும்.
இதுதொடர்பான ஒரிஜினல் வீடியோவை எடுத்துள்ளோம். டிராமா மாதிரி தயார் செய்துள்ளார்கள். அதை வட இந்திய தொலைக்காட்சிகளில் பதிவிட்டுள்ளனர். நேற்றைய தினம் தாம்பரத்தில் படுத்துள்ள நபரை அடிபட்டு படுத்திருப்பதாகவும், அந்த நபரை தமிழகத்தில் இருந்து வெளியேற்ற முடியாமல் இருப்பதாகவும் வீடியோ எடுத்து
பதிவிட்டுள்ளார்கள். உண்மையில் அப்படி ஒரு விஷயம் நடக்கவில்லை. இது தொடர்பாகவும் கைது செய்திருக்கிறோம். கைது செய்த ஒரு சிலருக்கு அரசியல் பின்பலம் இருக்கிறது எனவும் தெரிவித்தார்
மேலும், தற்போது அமைக்கப்பட்டுள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் கமிட்டி என்பது தமிழகத்திலோ, பீகாரிலோ அல்லது ஜார்கண்ட்டிலோ தொடர்பு கொள்வதற்கு தமிழகத்தில் ஒரு பொறுப்பதிகாரியை நிர்ணயித்திருக்கிறோம் என தெரிவித்தார். மேலும், கூகுள்பே குற்றங்கள் தொடர்பாக டி.ஜி.பி விழிப்புணர்வு ஏற்படுத்தினார் .
இதைத்தொடர்ந்து, சரணவனம்பட்டி பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய சைலேந்திரபாபு, அவர்களுடன்
அமர்ந்து தேநீர் அருந்தி, தொழிலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து
தைரியமூட்டினார்.
-ம.பவித்ரா