பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என்றும் தடை குறித்த பதாகையை கோயிலின் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக பழனியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் இந்து அறநிலையத்துறைக்கு கீழ் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்து அறநிலையத்துறை ஆலய நுழைவு விதி 1947 ஆம் ஆண்டின் படி இயற்றப்பட்ட
சட்டத்தில் இந்து அல்லாதவர்கள் இந்து கோயிலுக்குள் நுழைவதை தடுக்கின்றது.
இதையும் படியுங்கள் ; அரசு பெண் ஊழியர் இறந்தால் கணவருக்கு பதிலாக பிள்ளைக்கு ஓய்வூதியம் – மத்திய அரசு அறிவிப்பு!
இதனால், இந்து அல்லாத எவரும் கோயிலுக்குள் நுழையக்கூடாது என தடுக்கும் வண்ணம் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது. இது இந்து மதம் சார்ந்த மக்களின் நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்ளது. மேலும், தேவையற்ற சர்ச்சைகளை உருவாக்கும் வகையில் உள்ளது. இவ்வாறு உள்ள சூழலில் பழனி தேவஸ்தானத்தில் பழனி முருகன் கோயிலில் இந்து அல்லாத நபர்கள் திருக்கோயிலுக்குள் நுழைய தடை என்ற அறிவிப்பு பலகை தற்போதைய செயல் அலுவலரால் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்து அல்லாத சிலர் கோயிலுக்குள் நுழைய முயற்சி செய்துள்ளனர். பழனி தேவஸ்தானத்திற்கு உட்பட்ட பழனி முருகன் மற்றும் உப கோயிலுக்குள் இந்து அல்லாதவர்கள் நுழைய தடை விதிக்க வேண்டும். இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை என்ற பதாகையை மீண்டும் வைக்க வேண்டும்.
இவ்வாறு செந்தில்குமார் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஸ்ரீமதி முன் விசாரணைக்கு வந்தது விசாரணையின் போது இந்து
அல்லாதவர் கோவிலுக்குள் நுழைய தடை என்ற பதாகை மீண்டும் வைக்க வேண்டும் என
உத்தரவு பிறப்பித்து இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய
ஏற்கனவே நீதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அனந்த பத்மநாபன் மற்றும் அருண் சுவாமிநாதன் ஆகியோர் ஆஜராகி விரிவான வாதம் செய்தனர். பின்னர் இந்த வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதி ஸ்ரீமதி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது “இந்து அல்லாதவர்கள் கோயிலின் கொடிமரம் தாண்டி உள்ளே அனுமதிக்க கூடாது.
இந்து அல்லாதவர்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என்ற பதாகையை கோயிலில் பல்வேறு இடங்களில் வைக்க வேண்டும்.
மாற்று மதத்தை சார்ந்தவர்கள் கோவிலுக்குள் சாமி தரிசனம் செய்ய விரும்பினால் கோயிலில் இதற்காக ஒரு பதிவேடு வைக்க வேண்டும். அந்த பதிவேட்டில் இந்த சுவாமியின் மீது நம்பிக்கை கொண்டு தரிசனம் செய்ய வருகிறேன் என உத்தரவாதம் “உறுதிமொழி” எழுதிக் கொடுத்த பின்பு கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என நீதிபதி ஸ்ரீமதி தீர்ப்பளித்தார். மேலும், இந்து அறநிலையத்துறை ஆணையர் கோயிலின் ஆகம விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் நீதிபதி ஸ்ரீமதி உத்தரவு பிறப்பித்தார்.








