பாஜகவின் தேசிய துணைத் தலைவர் முகுல் ராய், தாய்க் கட்சியான திரிணாமுல் காங்கிரஸுக்கு (TMC) இன்று திரும்பினார்.
மேற்கு வங்கத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜிக்கு அடுத்தக் கட்டத்தில் பொதுச் செயலாளராக இருந்தவர் முகுல் ராய். இவருக்கும் மம்தாவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, 2017 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து விலகினார். தனது மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் இணைந்தார். அவருக்கு தேசிய துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், அவருக்கு பாஜகவில் சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று கூறப்பட்டது.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதை அடுத்து, முகுல் ராய், அந்தக் கட்சிக்கு திரும்புவார் என்று கூறப்பட்டது. கொல்கத்தாவில் சமீபத்தில் நடந்த பாஜக கூட்டத்தில் முகுல் ராய் கலந்துகொள்ளவில்லை. இதனால் அவர், பாஜகவில் இருந்து விரைவில் விலகுவார் என்று தகவல்கள் வெளியாயின.
இந்நிலையில், கொல்கத்தாவில் தனது மகன் ஷுப்ரன்ஷுவுடன் முதல்வர் மம்தா பானர்ஜி முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் முகுல் ராய். அப்போது பேசிய மம்தா பானர்ஜி, கடந்த தேர்தலில் முகுல் ராய், திரிணாமுல் கட்சியை பற்றி எதுவும் விமர்சிக்கவில்லை என்றும் தாய்க்கட்சிக்கு அவர் மீண்டும் திரும்பி இருப்பதன் மூலம் அவருக்கு அமைதி கிடைத்திருப்பதாக தான் உணர்வதாகவும் தேர்தலின் போது கட்சிக்குத் தூரோகம் செய்தவர்களை சேர்க்க மாட்டோம் என்றும் குறிப்பிட்டார்.
முகுல் ராய் பேசும்போது, ‘பாஜகவில் யாராலும் நீடிக்க முடியாது. மம்தா பானர்ஜியுடன் எனக்கு எந்த முரண்பாடும் இருந்ததில்லை. அவர் மேற்கு வங்கம் மற்றும் இந்தியாவின் ஒரே தலைவர்’ என்று தெரிவித்தார்.







