நாட்டில் மத கலவரங்கள் அதிகரிக்கவில்லை: மத்திய அரசு

நாட்டில் மத கலவரங்கள் அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் அலி இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர்…

நாட்டில் மத கலவரங்கள் அதிகரிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பகுஜன் சமாஜ் கட்சியைச் சேர்ந்த தினேஷ் அலி இது தொடர்பாக கேள்வி எழுப்பி இருந்தார்.

இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் பதில் அளித்துள்ளார்.

தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் தரவுகளை மேற்கோள் காட்டி மக்களவையில் பதில் அளித்துள்ள அவர், கடந்த 2018 முதல் 2020 வரை சமூக மற்றும் மத கலவரங்களில் ஈடுபட்டது தொடர்பாக 8 ஆயிரத்து 565 பேர் கைது செய்யப்பட்டதாகவும், அவர்களில் 761 பேர் குற்றவாளிகள் என உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை மத்திய அரசு கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ள நித்யானந்த ராய், கடந்த சில ஆண்டுகளாக மத கலவங்கள் அதிகரித்திருப்பதாகத் தெரியவில்லை என்றார்.

கலவரங்களில் உயிரிழப்பவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அளிப்பதை பொருத்தவரை கடந்த 2008 ஏப்ரல் 1 முதல் 2016 ஆகஸ்ட் 22 வரை தலா ரூ. 3 லட்சம் அளிக்கப்பட்டதாகவும், அதன் பிறகு அந்த தொகை ரூ. 5 லட்சமாக உயர்த்தப்பட்டதாகவும் அமைச்சர் நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.