எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் எஃப்ஐஆர் பதிவு செய்வதை தாமதப்படுத்த வேண்டாம் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
பட்டியலின மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எஃப்ஐஆர் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படக் கூடாது என்றும், இரண்டு மாதங்களுக்கு மேல் விசாரணை நடத்தப்படும் வழக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும் மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் உள்துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது:
ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் பழங்குடியின மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை காவல் துறையினர் விரைவாக விசாரிக்க வேண்டும். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அந்தக் குற்றங்களுக்கான சாட்சிகள் உட்பட வழக்குத் தொடரும் சாட்சிகளின் சரியான நேரத்தில் வருகை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் எப்ஐஆர் பதிவு செய்வதில் கால தாமதம் ஏற்படுத்தக்கூடாது. எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகள், எஃப்ஐஆர் பதிவு செய்வதிலிருந்து நீதிமன்றத்தால் வழக்கைத் தீர்ப்பது வரை சரியான முறையில் கண்காணிப்பு செய்யப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
விசாரணையில் ஏற்படும் தாமதங்கள் (எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்ட நாளிலிருந்து 60 நாட்களுக்கு மேல்) ஒவ்வொரு மூன்று மாதங்களுக்கும் மாவட்ட மற்றும் மாநில அளவில் கண்காணிக்கப்படும். தேவைப்படும் இடங்களில், விசாரணையை விரைவுபடுத்த சிறப்பு டிஎஸ்பிகள் நியமிக்கப்படுவார்கள்.
எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கான தேசிய ஆணையம் உட்பட பல்வேறு ஆதாரங்களில் இருந்து பெறப்பட்ட எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளின் அறிக்கைகளை முறையாகப் பின்தொடர்வதை மாநில அரசுகளில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டி சமூகங்களைச் சேர்ந்தவர்களின் உயிரையும் உடமைகளையும் காப்பாற்ற தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வன்கொடுமை நடப்பதற்கான வாய்ப்புள்ள பகுதிகளைக் கண்டறியலாம். இதுபோன்ற பாதிப்புக்குள்ளான பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலர்களை, காவல் துறை உள்கட்டமைப்பு வசதிகளுடன் பணியமர்த்த வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை தாமதமானால் கண்காணிப்புக் குழு அல்லது மாவட்ட நீதிபதிகள் தலைமையில் நடைபெறும் மாதாந்திரக் கூட்டங்களில், மாவட்ட மாஜிஸ்திரேட், காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட அரசு வழக்கறிஞர் ஆகியோர் கலந்துகொள்ளும் வகையில் வழக்கமான அடிப்படையில் மதிப்பாய்வு செய்யலாம்.
குற்றங்களைத் தடுப்பது தொடர்பான விஷயங்களுக்கு மத்திய அரசு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. எனவே, குற்றவியல் நீதி அமைப்பின் நிர்வாகத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறோம். எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த வேண்டும்.
சமூகத்தின் நலிந்த பிரிவினர், குறிப்பாக எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களில் அரசு ஆழ்ந்த அக்கறை கொண்டுள்ளது. எனவே இதுபோன்ற வழக்குகளில் மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்கள் அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எஸ்சி மற்றும் எஸ்டிகளுக்கு எதிரான குற்றங்களைக் கண்டறிந்து விசாரணை செய்வதில் நிர்வாகமும் காவல்துறையும் மிகவும் முனைப்பாக செயல்பட வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்சி, எஸ்டிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் தண்டனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. 2018ல் அந்த சட்டம் மேலும் திருத்தப்பட்டது. எஃப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன் பூர்வாங்க விசாரணை நடத்துவது அல்லது குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்ய எந்த அதிகாரத்தின் ஒப்புதலைப் பெறுவதும் இனி தேவைப்படாமல் இருக்கும் வகையில் பிரிவு 18A உருவாக்கப்பட்டுள்ளது.
– பரசுராமன்.ப