ஓபிஎஸ்ஸுடன் சமரசம் ஏற்பட வாய்ப்பில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம், ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும், பொதுக்குழுவை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும். பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஓபிஎஸ் தரப்புக்கு இந்த தீர்ப்பு சாதகமாக அமைந்துள்ளதால் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “கட்சியில் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவின் சட்டவிதிகளின்படியே அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதுதொடர்பான வாதங்களை நீதிமன்றத்தில் சரியான முறையில் முன்வைத்தோம். ஓபிஎஸ் தரப்பிலும் வாதங்களை முன்வைத்தனர். தற்போது தீர்ப்பு வந்துள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை விமர்சனம் செய்வது ஆரோக்கியமாக இருக்காது. தீர்ப்பின் நகல் வந்த பிறகு சட்ட வல்லுநர்களோடு ஆலோசனை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுப்போம் என்றும் அவர் கூறினார்.
ஓபிஎஸ்ஸோடு இணைந்து செயல்பட வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, “கட்சியில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு நிலை கிடையாது. 95 சதவிகிதம் பேர் ஒருமித்த கருத்தோடு ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளனர். அப்படி இருக்க சமரசம் ஏற்பட எங்கு வாய்ப்புள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து இப்போது கூற முடியாது. சட்ட நடவடிக்கையா அல்லது வேறு எந்த நடவடிக்கையா என்பதை கட்சி முடிவு செய்யும்” என்றும் கூறியுள்ளார்.







