ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும், பீகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ்குமார் அரசியல் நகர்வு குறித்து விவரிக்கிறது இந்த கட்டுரைப் பகுதி.
அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. பகைவனும் இல்லை என்ற வாக்கியம் யாருக்குப் பொருந்துகிறதோ இல்லையோ, ஐக்கிய ஜனதா கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான நிதிஷ்குமாருக்கே பொருந்தும். மத்தியில் ஆளும் பாஜகவுடன் மோதி விளையாடி வரும் நிதிஷின் தடாலடி அரசியல் குறித்துப் பார்க்கலாம். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியுடன், கால் நூறாண்டுக்காலம் நகமும் சதையுமாகப் பயணித்த கட்சிகள் இரண்டு மட்டுமே. ஒன்று மகாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த சிவசேனா கட்சி,மற்றொன்று சோசலிச வழியில் வந்த ஐக்கிய ஜனதா கட்சி. மூத்த தொழிற்சங்க வாதியான மறைந்த ஜார்ஜ் பெர்ணாண்டசும், ஜனதா தளத்தில் லாலு பிரசாத் யாதவின் நெருங்கிய சகாவாக இருந்த நிதிஷ்குமாரும் இணைந்து, 1990-களின் மத்தியில் சமதா கட்சியை ஆரம்பித்து பாஜகவுடன் கூட்டணி கண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மத்தியில் வாஜ்பாய் அமைச்சரவையில் ,ஜார்ஜ் பெர்ணாண்டஸும், நிதிஷ்குமாரும் இடம் பெற்றனர். அரசியல் தளத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜகவின் நெருங்கிய கூட்டாளியாகவே செயல்பட்டது சமதா கட்சி. பிளவுக்குப் பெயர் போன ஜனதா தளத்தில் தனி அணி கண்டு ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியைக் கட்டமைத்தார் லாலு பிரசாத் யாதவ். ஜனதா தளத்தை விட்டு சரத்யாதவ் வெளியே வந்தவுடன், சமதா கட்சித் தலைவர்களான பெர்னாண்டஸ், நிதிஷ்குமார் இணைந்து ஐக்கிய ஜனதா தள கட்சியை உருவாக்கினர்.
பீகார் சவால் நிறைந்த பெரிய மாநிலம் எனக் கருதிய பாஜக, வாஜ்பாய் ஆட்சியில், பீகாரிலிருந்து ஜார்க்கண்டை தனி மாநிலமாகப் பிரித்தது. நீங்கள் தான் முதலமைச்சர் எனக் கூறி. பழங்குடியின தலைவர் சிபு சோரனுடன் கூட்டணி கண்டது பாஜக. 2005-ல் பாஜகவுடன் ஆதரவுடன் முதலமைச்சரானார் நிதிஷ். துணை முதலமைச்சர் பதவி பாஜகவுக்கு வழங்கப்பட்டது.
பாஜகவில் வாஜ்பாயும், ஐக்கிய ஜனதாவில் ஜார்ஜ் பெர்ணாண்டசும் தீவிர அரசியலைக் குறைத்துக் கொண்ட பின் தான் நிதிஷ்குமாருக்கு பாஜகவின் உண்மையான முகம் தெரிய ஆரம்பித்தது. 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவின் பிரதமர் வேட்பாளராகக் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியை அறிவித்ததால் கூட்டணியை விட்டு விலகியது ஐக்கிய ஜனதா. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பாஜக, கணிசமாக வென்றது. நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின், இடையில் சிறிது காலம் பீகார் முதலமைச்சராக இருந்த ஜிதன் ராம் மன்ஜியை வைத்து நிதிஷ்குமாரையும், ஐக்கிய ஜனதாவையும் கபளீகரம் செய்ய முயன்றது பாஜக. லாவகமாகத் தப்பித்தார் நிதிஷ்.
அரசியலில் அதிரடி திருப்பமாக, ஆரம்பக் காலத்தில் தன்னை அரசியலில் ஆதரித்த லாலு பிரசாத்துடன், 20 ஆண்டுகளுக்குப் பிறகு கைகோர்த்தார் நிதிஷ்குமார். 2015 சட்டமன்றத் தேர்தலில், ஐக்கிய ஜனதா, ராஷ்டிரிய ஜனதா, காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகளுடன் சேர்ந்து கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை அடுத்து, நிதிஷ்குமார் மீண்டும் முதலமைச்சரானார். லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சரானார். வழக்கு ஒன்றில் தேஜஸ்வியின் பெயர் அடிபடவே ,துணை முதலமைச்சர் பதவியைத் தேஜஸ்வி ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. இந்த நேரத்தில், மற்றொரு திருப்பமாக பாஜகவுடன் கூட்டணி பேசி, அவர்களுடைய ஆதரவுடன் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
2019 ம் ஆண்டு மக்களவை தேர்தலில் , கூட்டணிக்கட்சியான ஐக்கிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளில், பாஜக ஒத்துழைக்கவில்லை. நிதிஷ்குமார் மீது அதிருப்தியிலிருந்த ஐக்கிய ஜனதா கட்சி எம்.பியான ஆர்.பி.சிங்கை, நிதிஷ்குமாரின் எதிர்ப்பை மீறி, மத்திய அமைச்சர் ஆக்கியது பாஜக.
அண்மைச் செய்தி: ‘‘ஏன் இந்த பாரபட்சம் நீதிமன்றமே?’ – சிபிஎம் மாநிலச் செயலாளர் கேள்வி
2020 ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், ஐக்கிய ஜனதாவை வலுவிழக்கச் செய்யும் உக்தியாக, ராம்விலாஸ் பாஸ்வானின் மகனை வைத்து லோக் சக்தி ஜனதா கட்சியைத் தனியே நிற்க வைத்து, குறிப்பாக ஐக்கிய ஜனதா போட்டியிடும் தொகுதிகளில் வலுவான வேட்பாளரை நிறுத்தி, அதிக அளவில் வாக்குகளைப் பிரிக்க வைத்தது. இதனால் பல தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளம் தோல்வி கண்டது. ஆனாலும் கூட்டணியின் வெற்றியாலும், லாலு பக்கம் நிதிஷ் சென்றுவிடக் கூடாது என்ற பயத்தாலும், நிதிஷ்குமாரையே முதலமைச்சராக அறிவித்தது பாஜக. இம்முறை பாஜக இரண்டு துணை முதலமைச்சர் உட்பட முக்கிய துறைகளை எடுத்துக் கொண்டது.பொறுமையின் சிகரம் என அழைக்கப்படும் நிதிஷ் குமார், குடியரசுத் தலைவர் மற்றும் துணைத்தலைவர் தேர்தல்கள் முடிந்த பின், பாஜக ஆதரவுடன் வகித்த முதலமைச்சர் பதவியைத் தடாலடியாக ராஜினாமா செய்தார். மீண்டும் ராஷ்டிரிய ஜனதா, காங்கிரஸ், இடது சாரிகள் ஆதரவுடன் மீண்டும் பீகார் மாநில முதலமைச்சராக உள்ளார் பாட்னா என்.ஐ.டியில் பொறியியல் படித்த நிதிஷ்குமார்.
பீகாரில் நீண்ட காலம் முதலமைச்சராக இருந்த பட்டியலில் முதலிடம் வகிக்கும் நிதிஷ்குமார் தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேல் அப்பதவியில் நீடிக்கிறார். ஜெய பிரகாஷ் நாராயணன், கர்பூரி தாகூர் தொடங்கி வி.பி.சிங், சந்திரசேகர், லாலு பிரசாத், ஜார்ஜ் பெர்னாண்டஸ், வாஜ்பாய், அத்வானி, நரேந்திர மோடி, சோனியா, ராகுல் எனப் பல அரசியல் ஆளுமைகளோடு பழகி மவுனமாக அரசியல் செய்து களத்தை வெல்பவராகத் திகழ்கிறார். வாஜ்பாய் முதலில் 13 நாட்கள் பிரதமராக இருந்ததை போல், நிதிஷும் பீகார் முதலமைச்சராக முதலில் ஏழு நாட்கள் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்தியில் அசுர பலத்துடன் ஆட்சி செய்து வரும் பாஜகவுடன் மோதி விளையாடத் தொடங்கிவிட்டார் நிதிஷ்குமார். இதன் தாக்கம் எப்படி இருக்கும்? பாஜக என்ன பதிலடியைக் கொடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.
– ரா.தங்கபாண்டியன்