ஜிப்மர் செவிலியர்கள் வேலை வாய்ப்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒன்றிய அரசின் மருத்துவம் மற்றும் குடும்ப நலத் துறை கட்டுப்பாட்டில் இயங்கும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், செவிலியர் காலிப் பணியிடங்களுக்காக 2022, ஜூலை 13 ஆம் தேதியிட்ட வேலை வாய்ப்பிற்கான அறிவிப்பின்படி 139 காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு செய்வதற்கான விண்ணப்பம் வெளியிடப்பட்டது.
அதன்படி, ஜூலை 21 முதல் ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை இணையதளத்தில் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் 28.07.2022 ஆம் தேதிக்குப் பிறகு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி தேர்வு மையங்களைத் திட்டமிட்டு இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளது. இது தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் செவிலியர்கள் தேர்வு எழுத இயலாதபடி ஒன்றிய அரசு திட்டமிட்டு புறக்கணித்து உள்ளது.
எனவே, ஒன்றிய அரசால் முடக்கப்பட்டுள்ள இணையதள சேவையை குறிப்பிட்ட தேதி வரை செவிலியர்கள் விண்ணப்பிக்கும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்வு எழுதும் மையங்களை இணையதளத்தில் உடனடியாக இணைக்கும்படி ஒன்றிய அரசை வலியுறுத்துகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
-ம.பவித்ரா








