மனைவி மற்றும் இரு குழந்தைகளை ஈவுஇரக்கமின்றி கொலை செய்துவிட்டு, தேயிலை தோட்ட தொழிலாளி உயிரை மாய்த்துக்
கொண்ட சம்பவம், ஒரு கிராமத்தையே அதிர வைத்துள்ளது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கம்பை கிராமம். இதற்கு அருகே உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் வேலைபார்த்து வந்தவர்தான் அசோக் பகத். வடமாநிலத்தை சேர்ந்த இவர், தனது மனைவி, 8 வயது மகன், 4 வயது மகள் என குடும்பத்துடன், அங்கேயே கடந்த இரண்டு ஆண்டுகளாக வசித்து வந்தார். அசோக் பகத்தை போன்று ஏராளமான வடமாநில தொழிலாளர்கள், தேயிலை தோட்டத்திலேயே தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், வழக்கம்போல் தோட்ட வேலைக்கு தொழிலாளர்கள் அனைவரும் புறப்பட்டுசென்ற நிலையில்,அசோக் பகத் வீடு மட்டும் நீண்ட நேரமாக பூட்டிக் கிடந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர், அசோக் பகத் வீட்டை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அசோக் பகத் மற்றும் அவரது மனைவி மற்றும் மகன், கழுத்து அறுபட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளனர். அவரது 4 வயது மகளோ தண்ணீர் தொட்டியில் சடலமாக மிதந்துள்ளார். அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர் போலீசார். இதில், மனைவி மற்றும் இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, அசோக் பகத் உயிரை மாய்த்துக்
கொண்டது தெரியவந்தது. அசோக் பகத், தஉயிரை மாய்த்துக் கொள்வதற்கு
முன்பாக, இந்தியில் தான் எழுதிய கடிதத்தை மனையின் சடலத்தின் மீது வைத்துவிட்டு விபரீத முடிவை எடுத்துள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றி விசாரணையை தொடங்கியுள்ளனர் போலீசார்.
அசோக் பகத், வீட்டின் அருகே வடமாநிலத்தை சேர்ந்த 4 வயது சிறுமி கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போயுள்ளார். இதுதொடர்பான வழக்கில் அசோக் பகத்திடம் விசாரணை நடத்தி இருக்கிறது போலீஸ். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் அசோக் பகத், உயிரை மாய்த்துக்
கொண்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவி, இருக்குழந்தைகளை கொன்றுவிட்டு வடமாநில தொழிலாளி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம், கொலக்கம்பை தேயிலை தோட்டத்தில் வேலைபார்க்கும் சக தொழிலாளர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.







