திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களின் வீடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றார்கள். திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டித்துள்ளது மட்டுமின்றி, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் மத்திய அரசின் ஏவல் என எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் திருநெல்வேலியில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வீட்டில் இன்று காலை முதல் 4 மணி நேரத்திற்கும் மேலாக சோதனையில் ஈடுபட்டு வரும் தேசிய புலனாய்வு முகமை குழுவினர் வெளியேற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது, பொதுச் செயலர் கனி, நிர்வாகி பர்கிட் அலாவுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் விசாரணை நடைபெற்று வரும் நெல்லை முபாரக் வீட்டிற்குள் எஸ்டிபி கட்சியின் வழக்குரைஞர்களை அனுமதிக்க வேண்டும், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதைத் தடுக்க நினைக்கும் பாஜகவை கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இது குறித்து எஸ்டிபி கட்சியின் நிர்வாகிகள் கூறுகையில், மேலப்பாளையத்தில் சுமார் 300 சதுர அடி மட்டுமே கொண்ட சிறிய இல்லத்தில் நெல்லை முபாரக் வசித்து வருகிறார். அவரது வீட்டில் 4 மணி நேரத்துக்கு மேலாக சோதனையிடுவதும், விசாரிப்பதும், அச்சுறுத்தும் வகையிலேயே உள்ளது. வழக்கறிஞர்கள் குழுவை கூட உள்ளே அனுமதிக்காதது, உள்நோக்கத்துடன் என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு போட்டிருப்பது போல தெரிகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா